News

Sunday, 27 December 2020 04:45 PM , by: Daisy Rose Mary

நீலகிரி தேயிலை ஏலம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலமாக நடத்த உள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேயிலை விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர்எம்.பாலாஜி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேயிலைத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். 180க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள தேயிலை ஏலத்தில் சரிவர விலை கிடைக்காமல் பல தொழிற்சாலைகள் மூடும் அபாயம் இருப்பதால் இதை சரிசெய்வதற்காகவும், தேயிலைத் தொழிலை பாதுகாக்கவும் தென்னிந்திய தேயிலை வாரியம்பல்வேறு முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

ஆன்லைன் மூலம் ஏலம்

முதற்கட்டமாக, வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் முறைப்படி தேயிலை ஏலம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாரியம் செய்துவருகிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட சாஃப்ட்வேர் மூலமாக தற்போது குன்னூரில் வர்த்தகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த வாரம் தேயிலை ஏலத்தில் விற்கப்பட்ட விலையில் மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப 10 சதவீதம் கூட்டவோ அல்லது குறைத்தோ மட்டுமே அடிப்படை விலை நிர்ணயிக்கப்படும்.

இதிலிருந்து விற்பனையாளர்கள் நிர்ணயிக்கும் விலை 5 நொடிக்கு ஒருமுறை படிப்படியாக கணினி திரையில் அதிகரித்துக்கொண்டே வரும். விலை கட்டுப்படியாகாதவர்கள் ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். இதன் மூலம் தேயிலைக்கு சிண்டிகேட் அமைத்து மிகப்பெரிய நிறுவனங்கள் விலையை தங்கள் கட்டுக்குள் வைப்பது தவிர்க்கப்படும் என்றார்.

 

உடனடி மறு ஏலம்

இது தொடர்பாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வைரவன் கூறுகையில், “காலை9 மணிக்குத் தொடங்கும் ஏலம் மாலை 5 மணிக்கு முடிவடையும்போது விற்காமல் உள்ள தேயிலைக்கு மீண்டும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் மறுஏலம் நடத்தப்படும். இவை அனைத்தும் ஏற்கெனவே நடக்கும் ஆன்லைன் ஏலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடத்தப்படுவதால் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)