புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு பகுதி கிராமங்களில் இந்து கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வரும் நிகழ்வும் அதே போல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது இந்துக்கள் அவர்களின் முறைப்படி சீர் செய்து அவர்களின் விழாக்களின் பங்கேற்பதும் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கீரமங்கலம் மேலக்காடு பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல பின்னே அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் வரிசையாக அணிவகுத்து கீரமங்கலம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை அடைந்தனர்.