பூமி சூடேற்றம் தொடர்ந்தால், உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 'சயன்ஸ்' இதழில் வெளியிட்டுள்ள அந்த ஆய்வுக் கணிப்பின்படி, பூமியின் தட்பவெப்பம் 2 டிகிரி அளவுக்கு உயர்ந்தால் கூட, பூச்சி இனங்கள் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் பூச்சிகளின் செறிமானத்திறனும் கூடிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமி வெப்பம் உயரும்போது, அதிகரிக்கும் பூச்சிகளின் தாக்குதலால் 10 முதல், 25 சதவீதம் வரை கோதுமை, சோளம், அரிசி போன்ற பயிர்கள் கூடுதலாக நாசமாகும். உணவுப் பயிர்களில் கோதுமைக்குத்தான் அதிகபட்ச சேதம் ஏற்படும். இந்தியாவில் அதிகம் விளையும் நெற்பயிர், 20 சதவீத அளவுக்கு பூச்சிகளால் நாசமாகும்.
அதிக அளவில் பூச்சிகள், அதுவும் அதிகப் பசியுள்ள பூச்சிகள் உருவாவது, நேரடியாக நம் சாப்பாட்டில் கை வைக்கும் பிரச்னை. எனவே, காற்றில் கரியுமில வாயு கலக்கும் விகிதத்தை வேகமாக எல்லா நாடுகளும் இப்போதே குறைக்க வேண்டும் என, ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.