News

Saturday, 20 February 2021 11:17 AM , by: Deiva Bindhiya

Credit : New 18

பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடி வரை உயர்ந்ததால், தமிழக பகுதிக்கும் கேரளாவுக்கும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிவைக் கண்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 1081 கனஅடி நீர் வந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக இருந்தது. 933 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக இருந்தது. 728 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது.

பெரியாறு 18.2, தேக்கடி 13.2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையோட்டி உள்ள கூடலூர், கம்பம், உத்தம பாளையம் பகுதியில் நேற்று காலையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பொது மக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளனர்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவது குறித்து தமிழகம் மற்றும் கேரள மாநில நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மத்தியக் குழு கருத்துக் கேட்டுள்ளது.

கேரள அரசு தடை (Government of Kerala banned)

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் 14,707 ஏக்கரில் இரு போக சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் 1979-ம் ஆண்டு 152 அடிக்கு அணையில் நீர் தேக்க கேரள அரசு தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு (Judgment of the Supreme Court)

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் 142 அடி வரை நீர் தேக்கலாம் என 26.4.2014-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடி வரை நீர் தேக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி மூவர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஆண்டுதோறும் அணையில் ஆய்வு மேற்கொண்டு வழங்கும் ஆலோசனைப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் பிரணாப் ஜோதிநாத் உள்ளனர்.

ஷட்டர்களை இயக்கி சோதனை (Shutters drive test)

இந்நிலையில் அணையில் நேற்று ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஷட்டர்களை இயக்கிப் பார்த்தது.நேற்றைய ஆய்வில் மணிவாசன் பங்கேற்காத நிலையில் அக்குழு மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது.

கசிவுநீர் சோதனைக்காக கேன்களில் சேகரிக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா மின்சாரம் வழங்கிய நிலையில் 13 ஷட்டர்களில் 3, 4வது ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டது. ஆய்வுக்குப்பின் நேற்று மாலை தேக்கடியில் தமிழக, கேரள அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மரங்கள் வெட்டப்படுமா? (Will the trees be cut down?)

இதுகுறித்து மத்திய கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறுகையில், ''பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையையொட்டிய பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்துக் கேட்பு (Feedback)

அணையில் 142 அடி தேக்க காலநிலை(ரூல்கர்வ்) குறித்து இரு மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. எனினும் மத்திய நீர்வள கமிஷனின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும். அணைக்கு மின்சார இணைப்பு கொடுத்தது திருப்திகரமாக உள்ளது'' என்றார்.

காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, தலைமை பொறியாளர் செல்வராஜ், மதுரை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் ஷாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, துணைக்குழு தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...

தமிழக அரசு பயிர் காப்பீட்டு பிரீமியம் மானியத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஓதுக்கீடு

TNAU சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய பயிற்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)