Success stories

Friday, 11 December 2020 02:13 PM , by: KJ Staff

Credit : Asianet News Tamil

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் மோதகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகேசன், பி.இ. எம்.பி.ஏ (Balamurugan B.E. MBA.,) படித்து பெரிய நிறுவனங்களில் விற்பனை பிரிவில் பணியாற்றிய இவர், கொரோனா ஊரடங்கில் தனது வேலையை விட்டு விட்டு முழுநேர விவசாயியாக மாறியுள்ளார். அனுபவம் இல்லாவிட்டாலும் திட்டமிடல் இருந்தால் எதுவும் சாத்தியம் என, விவசாயத்தில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.

கொய்யா, பப்பாளி சாகுபடி:

தந்தை மீனாட்சிசுந்தரம் விமானப்படை (Air Force) பிரிவில் ஓய்வு பெற்றவர். சொந்தமாக உள்ள 20 ஏக்கர் நிலத்தை பார்த்துக் கொள்வதற்காக, ஓய்வுக்கு பின் மதுரை வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், 2 ஏக்கரில் 'அர்க்கா கிரண்' சிவப்பு கொய்யாவும், 2 ஏக்கரில் 'ரெட்லேடி' ரக பப்பாளியும் அடர் நடவு முறையில் நட்டார். இயற்கை சாகுபடி தான் என்பதில் உறுதியாக இருந்ததால், தற்போது 1400 கொய்யா, 1400 பப்பாளி மரங்கள் வளர்கின்றன. நட்ட எட்டாம் மாதத்தில் கொய்யா காய்த்த போது, மரம் பருக்க வேண்டும் என்பதற்காக காய்களை உதிர்த்து விட்டார்கள். தற்போது நன்கு காய்க்கிறது.
கொய்யா, பப்பாளி (Papaya) மட்டுமின்றி 2 ஏக்கர் ஆட்டுதீவனப்பயிருக்கும் சொட்டுநீர் பாசனம் (drip irrigation) அமைத்தார்.

பூச்சிகளை விரட்ட இயற்கை உரம்:

பக்கத்து விவசாயிகளிடம் இருந்து நாட்டுமாடுகளின் சாணம், கோமியம் வாங்கி ஜீவாமிர்தம் (Jivamirtham) தயாரித்து மரங்களுக்கு சொட்டுநீர் மூலம் பாய்ச்சுகிறார். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 3 மணி நேரங்களில் தண்ணீர் மூலம் தனிநபராக உரம் பாய்ச்சி விடலாம் என்கிறார் இந்த இயற்கை விவசாயி. பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய் (Neem Oil) தெளிக்கிறார். ஆறுக்கு ஆறடி இடைவெளியில் அடர் நடவு முறையில் மரம் நட்டுள்ளதால், கவாத்து செய்வதற்கு எளிதாக உள்ளது.

ஆன்லைன் ஆப்:

இயற்கை விவசாயம் மட்டுமின்றி செம்மறி ஆடு (Sheep) வளர்த்து விற்கிறார். 5 ஏக்கரில் குதிரைவாலியும், 5 ஏக்கரில் மக்காச்சோளமும் பயிரிட்டுள்ளார்.
3 நாட்களுக்கு ஒருமுறை கொய்யா 120 கிலோ கொய்யா கிடைக்கிறது. இவற்றை 'ஆன்லைன் ஆப் (Online App)' உருவாக்கி, அதில் ஆர்டர் செய்பவர்களுக்கு விற்பனை செய்கிறோம். கொய்யா, பப்பாளி, குதிரைவாலி அரிசியை ஆர்டர் செய்பவர்களுக்கு நாங்களே நேரில் சென்று விற்பனை செய்கிறோம். இதன் மூலம் இடைத்தரகர் இன்றி ஓரளவு லாபம் ஈட்டுகிறோம் என்றார். இயற்கை முறையில் விவசாயம் செய்து இலாபம் ஈட்டி வரும் இவர் வளரும் இளம் விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

தொடர்புக்கு: 98946 86186

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இலாபத்தை அள்ளித் தரும் ஐந்தடுக்கு சாகுபடி முறை! அசத்தும் விவசாயத் தம்பதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)