Animal Husbandry

Friday, 10 April 2020 02:13 PM , by: KJ Staff

Designed by : Dayana Priyatharshini . B

கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தின் காரணமாக ஊரடங்கு, உலகே அடங்கிக் கிடக்கும் வகையில் ஸ்தம்பித்துப் போயிருப்பது மக்களுக்கு பெருமளவு பாதிப்பையும், மன உளைச்சலையும் தந்திருக்கிறது. இது பெருமளவு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்நடைகளை எப்படி பராமரிப்பது என்பது மிக அவசியமாகிறது. அதற்கு வேண்டிய முக்கியமான வழிமுறைகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்வது நல்லது.

முக்கிய இடர்பாடுகள்

  • மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதில் சிக்கல்
  • தீவன தட்டுப்பாடு / அடர் தீவன விலை உயர்வு
  • மருத்துவத்திற்கு கால்நடைகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் 
  • பாலை விற்பனை செய்வதில் சிரமம்

இது போன்ற பல்வேறு சிரமம்களை கால்நடை விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது

சமூக விலகல் /சமூக இடைவெளி ஒன்றே இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களை நம்பியே உள்ளன. இயல்பாக கிராமப்புறங்களில் கால்நடை விவசாயிகள் ஒன்றுகூடி கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த சூழ்நிலையில் நாம் அதை தவிர்ப்பது நன்மை பயக்கும், மேய்ச்சலுக்கு செல்லும் போது போதுமான இடைவெளி விட்டு மாடுகளை மேய்ப்பது நல்லது. அதேபோல் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் மாடுகளை மேய்ப்பது தவறு. தினமும் மாடுகளை மேய்ப்பதற்கு வீட்டின் வெளியே வருவதையும் தவிர்த்து விடுவது நல்லது. சுழற்சி முறையில் ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக தங்கள் வீட்டின் அருகில் கால்நடைகளை மேய்க்கலாம். இயல்பாக மேய்ச்சல் நிலங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தனித்தனியே கால்நடைகளை மேய்ப்பது சிறந்தது.

தீவன மேலாண்மை (Feeding Management During lockdown)

தீவன தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த காலத்தில் தினசரி நாட்டுக் கம்பு - 100 கிராம் அளவிற்கு முளைகட்டி கொடுத்துவந்தால் மாடுகளுக்கு தேவையான அனைத்து விதமான நுண் சத்துக்களும் கிடைக்க அது வாய்ப்பாக அமையும். இதுபோன்ற நேரங்களில் அனைத்து வகையான அடர் தீவனங்களும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அதனால் ஒருவகை தவிடு, உமி, பொட்டு அல்லது  புண்ணாக்கு அதிக அளவில் கொடுத்து வருவது தவறில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தானியங்களை உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் ஆனால் ஒவ்வொரு முறையும் தானியங்களை கொடுக்கும்போது அவற்றை குருணை வடிவில் அரைத்து அளிக்கவேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றை அதிகளவில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக பட்சம் ஒரு கிலோ வரை கொடுக்கலாம். எந்த ஒரு தானியத்தையும் காய்ச்சி கூழாக்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தானியங்களை கொடுக்கும் போதும் அவற்றை ஊறவைத்து கொடுப்பது செரிமான தன்மையை அதிகரிக்கும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து தீவன பொருட்கள் வாங்க எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த சமயத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு தீவனங்களை விற்பதால் ஏழை விவசாயிகளால் அதை வாங்க முடிவதில்லை. 

பசுந்தீவன மேலாண்மை

பசுந்தீவன தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த காலகட்டத்தில் எளிய முறையில் 7 நாட்களில் அனைவரும் தங்கள் வீட்டிலேயே மண் இல்லா தீவன முறைப்படி பசுந்தீவனம் தயாரிக்கலாம். இதற்கு சோளம் சிறந்த தானியமாகும். நம் கிராம விசேஷங்களுக்கு முளைகட்டி நாத்து எடுப்பதுபோல (பாரி முளைத்தால் என்றும் சொல்லப்படுகிறது) இதையும் வீட்டிலேயே நாம் செய்து கால்நடைகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.

அரசாங்க உதவி (Helpline Number)  

கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாத இந்தநிலையில் இணையதளம் மூலமாகவும் இலவச உதவி எண்கள் மூலமாகவும் நமக்கு தேவையான தகல்வல்களையும் முதல் உதவிகளையும் பெற முடியும். இதற்கு அரசாங்க உதவி எண் 1551 அல்லது RFIS Toll Free 18004198800 எண்ணை தொடர்பு கொள்ளலாம். கால்நடை மருத்துவமனைகள் முழுநேரமும் இயங்கி கொண்டிருக்கிறது. அவசர சேவைகளுக்கு உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம்.

விற்பனையாளர் கவனத்திற்கு

பாலை தானாக விற்பனை செய்பவர்கள் அரசாங்க அனுமதித்தால் e-pass பெற்றுக்கொள்ளலாம். நோய் தொற்றின் பயத்தால் சில வாடிக்கையாளர்கள் பால் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதன் மூலம் மீந்த பாலை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் லாபம் அதிகம் பெறலாம், மீதம் உள்ள பாலையும்  நல்ல முறையில் பாதுகாக்கலாம்.

Designed by: Harivarman .S

நோய் தோற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பொது சுகாதார வழிமுறைகள்

  • சுத்தமான கொட்டகை, சுத்தமான மாடுகள், சுத்தமான கறவையாளர் இவை மூன்றும் சுத்தமான பால் உற்பத்திக்கு மிக அவசியம்.  இந்த கொரோனாவின் தாக்கத்தால் அதிக படியான சுகாதார வழி முறைகள் கடைபிடிக்க வேண்டியுள்ளது.
  • பால் கறவைக்கு முன்னரும் பின்னரும் 20 நாழிகைகள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  • பால் கறக்கும் பாத்திரத்திதை சுத்தமாக கழுவி சூரிய ஒளியில் காயவைப்பது அவசியம்.
  • கூட்டுறவு பால் உற்பத்தி சங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதன் மூலம், சீக்கிரமாக பாலை கொடுத்துவிட்டு வீடு திரும்ப முடியும்.
  • தேவை இல்லாத வெளி ஆட்களை பண்ணையில் அனுமதிக்கக்கூடாது.
  • தேவையில்லாமல் எதையும் தொடுவதை தவிர்க்கவும். மீறி தொட்டுவிட்டால் உடனே கைகளை சுத்தம் செய்யவும்.
  • மாட்டு கொட்டகையை தினமும் சுத்தம் செய்யுதல் அவசியம்.

 மேலே கூறியுள்ள தகவல்களை பின்பற்றி கால்நடைகளை காப்போம்.

முனைவர் சா. தமிழ்குமரன் 
கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்
kalnadainanban@gmail.com

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)