பாலில் மனிதனுக்கு தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன என்பது நாம் அனைவ்ரும் அறிந்ததே. ஆனால் பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட்டு முறையை விநியோகிக்க வேண்டியது கால்நடை வளர்ப்பவர்களின் முக்கிய பணியாகும்.
சுகாதாரமற்ற சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் பல்வேறு நோய்கள் வரக் கூடும். அதுமட்டுமல்லாது பாலில் சேரும் நுண்கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையே கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க இயலாது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க தொழுவத்தையும், கறவை மாடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
சுத்தமான பாலை கறப்பது எப்படி?
- பால் கறக்கும் இடத்தை வாரத்திற்கு இரு முறையேனும் தகுந்த கிருமி நாசினிகள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு சுத்தப்படுத்துவதன் மூலம் பால் கறக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.
- முதலில் பால் கறப்பவர்கள் எந்தவித நோய் பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். பால் கறக்கும்போது புகை பிடித்தாலோ, எச்சில் துப்புவதோ, இருமுதல் போன்ற எந்த செயலிலும் ஈடுபட கூடாது. விரல் நகங்கள் வெட்டப்பட்டு பால் கறக்கும் முன் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவி துணி கொண்டு துடைத்த பின்னரே பால் கறக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பால் கறப்பவர்களின் மூலமாக பாலுக்குள் செல்லும் நுண்கிருமிகள் வெகுவாக குறையும்.
- தொழுவம் எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் தான் ஈ மற்றும் கொசுக்களினால் பரவக்கூடிய நோய்த்தொற்று அனைத்தும் குறைந்துவிடும். அதேபோன்று கால்நடைகளின் மடி, காம்புகள், தொடை, தொடை இடுக்குகள் உள்ள சாணம் மற்றும் வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண் போன்றவற்றை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
- பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுவத்தைக் கழுவி சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். அதே போன்று பால் கறக்கும் சமயங்களில் வைக்கோல் இடவோ கூடாது.
- பால் கறக்கும் வேளைகளில் சில கறவை மாடுகள் வாலை வீசும். எனவே பால் கறப்பதற்கு முன்பு வாலை தொடை இடுக்கில் சிக்க வைத்து விட்டால் எவ்வித தொந்தரவு இல்லாமல் பால் கறக்க முடியும்.
- பால் கறப்பதற்கு முன்பு எல்லா காம்புகளிலும் உள்ள முதல் பாலை தரையில் பீய்ச்சி விட்டு பின்னர் பால் கறக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பால் காம்புகளில் நுழைந்துள்ள கிருமிகள் பாலில் சேராமல் தடுக்கப்படுகின்றது.
- பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
- கறக்கும் பால் பாத்திரமானது மேலே வாய் குறுகியும், கீழே அகன்றும் உள்ள எவர்சில்வர் மற்றும் அலுமினியத்தாலான பாத்திரங்களை பயன்படுத்துவது சாலா சிறந்தது. இவ்வகை பாத்திரங்களை பயன் படுத்துவதால் காற்றினால் பாலுக்குள் சேரும் நுண்ணுயிரிகள் தடுக்கப் படுகின்றன.
- பால் கறந்தவுடன் உடனடியாக பால் பாத்திரத்தை உலர்ந்த, சுத்தமான மெல்லிய வெள்ளை துணி கொண்டு வடிகட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பாலில் சேர்ந்த தூசி, முடி ஆகியவை நீக்கப்பட்டுவிடும்.
- பால் கறவை இயந்திரம் பயன்படுத்துபவர்களெனில் இயந்திரத்தின் மடி மற்றும் கறவைப் பகுதியை தினசரி சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
- பால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க கறந்த பாலை உடனடியாக 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அல்லது அதற்குக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் தடுக்கப்படுகின்றன.
Anitha Jegadeesan
Krishi Jagran