Union Cabinet approves PM Vishwakarma Scheme
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா" PM Vishwakarma திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நடைப்பெற்று முடிந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தனது உரையில் “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்களது பாரம்பரிய தொழிற் பயிற்சியை வலுப்படுத்துவதையும், அத்தொழிலினை மேலும் வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
குறைந்த வட்டியில் கடனுதவி:
பிரதமரின் விஸ்வகர்மா (PM Vishwakarma) திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் பயன்படும். இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும்.
முதற்கட்டமாக பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் 18 பாரம்பரிய தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
- தச்சர்
- படகு தயாரிப்பாளர்
- கவசம் தயாரிப்பவர்;
- கொல்லர் (லோஹர்)
- சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்;
- பூட்டு தயாரிப்பவர்
- பொற்கொல்லர் (சோனார்);
- குயவர் (கும்ஹார்);
- சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்;
- காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்;
- கொத்தனார் (ராஜமிஸ்திரி);
- கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்;
- பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்);
- முடி திருத்தும் தொழிலாளர் (நயி);
- பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்);
- சலவைத் தொழிலாளி (டோபி);
- தையல்காரர் (டார்ஸி);
- மீன்பிடி வலை தயாரிப்பவர்.
PM Vishwakarma திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இத்திட்ட த்தினை செயல்படுத்துவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என கருதப்படுகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் பல லட்சம் கைவினைஞர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று பலன் அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் காண்க:
Gold Rate- ஒரே நாளில் சென்னை- கோவையில் தங்கத்தின் விலை அதிரடி சரிவு