News

Sunday, 09 April 2023 02:53 PM , by: Muthukrishnan Murugan

CRPF exam should be conducted in all regional languages says CM MKstalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது (CRPF) இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும். இப்படையானது மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தன்னிச்சையானது மட்டுமல்ல பாகுபாடு காட்டக்கூடியது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு-

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனெக் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

விருப்புவெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் காண்க:

புதுமையான முறையில் பொதுமக்களின் குறைத்தீர்வு- தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

PM kisan 13 வது தவணை- பதிவு செய்த விவசாயிகளுக்கு கிடைக்காமல் போக காரணம் இதுதானா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)