News

Friday, 01 December 2023 03:22 PM , by: Muthukrishnan Murugan

sugar mills

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் , அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை பரிசீலனை செய்து ஊதிய உயர்வு வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என வேளாண் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது சர்க்கரைத் துறையினை வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு மாறுதல் செய்ய உத்தரவிட்டார். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக கரும்பு சாகுபடி பரப்பு 95,000 எக்டர் பரப்பிலிருந்து 1,50,000 எக்டர் பரப்பிற்கு அதிகரித்துள்ளதுடன், சர்க்கரை கட்டுமானமும் 9.27 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலாபத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகள்:

அதிமுக அரசு கரும்பு நிலுவைத் தொகையாக சுமார் ரூ.675.52 கோடியை விட்டுச்சென்ற நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகையும், தொழிலாளர்களுக்குரிய ஊதிய நிலுவைத் தொகையையும் உரிய நேரத்தில் வழங்கி வருகிறார்கள். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டுமே இலாபத்தில் இயங்கி வந்த நிலையை மாற்றி தற்போது 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபகரமாக இயங்கி வருகிறது.

கரும்பு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உற்பத்தி ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத் தொகை, கரும்பு நிலுவைத் தொகை. ஊதியம். போனாஸ். அத்தியாவசிய செலவினங்களுக்கு மொத்தமாக ரூ.1223.59 கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

எம்.ஆர்.கே. மற்றும் கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் ஆலை அமைக்கும் பணியும் கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணை மின் திட்ட பணிகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 6 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் இணை மின்திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நீண்ட நாட்களாக அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதனை பரிசீலனை செய்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கும் நோக்குடன், குழு ஒன்று அமைத்து, குழுவின் அறிக்கையினை பெற்று அதன் அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

35% ஊதிய உயர்வு:

தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், 30.09.2022 வரையிலான காலத்திற்கு நல்லெண்ண தொகையாக (Goodwill amount) நிரந்தர தொழிலாளி ஒருவருக்கு ரூ 40,000 முதல் ரூ. 50,000 மற்றும் பருவகால தொழிவாளிக்கு ரூ.32,000 முதல் ரூ.40,000 வரையில் கிடைக்க வழிவகை, செய்யப்பட்டுள்ளது. மேலும், 01.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்கு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்- மாநிலம் வாரியாக எவ்வளவு விலை?

கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும், பணியாளர்களும் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ள ஊதிய உயர்வினை ஏற்று, அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேலும் இலாபகரமாக இயக்கிட தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் காண்க:

Gold Rate: ரொம்ப நாளுக்குப் பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலை!

பூந்தோட்ட மின் இணைப்புக்கு இலவச மின்சாரம்- விவசாயிகள் கோரிக்கை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)