Inauguration of Ultra High Purity Liquid Medical Oxygen Manufacturing Plant of Inox Air Products
ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், 150 கோடி ரூபாய் முதலீட்டில் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் ஐநாக்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 43 இடங்களில் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் வாயு உற்பத்தி மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் முதன்முதலாக, 1986ம் ஆண்டு சென்னையில் உள்ள மணலியில் வாயுக்கள் பிரிப்பு ஆலை ஒன்றை தொடங்கியது. அதற்குப் பிறகு, சேலம், திருநெல்வேலி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டது. இந்நிறுவனம், 4.5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தொட்டிகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் திரவ ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்தது.
தற்போது, 150 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில், இந்நிறுவனம் நிறுவியுள்ள புதிய 200 TPD திறன்கொண்ட அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிறுவனம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உட்பட அனைத்து அனுமதிகளும் பெற்றிட தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒற்றைச்சாளர இணையம் மூலம் ஆதரவுச் சேவைகள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் :
GX குழுமம், ஃபைபர்-டூ-தி-ஹோம் (Fiber to the home) துறையில் ஐரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். சுமார் 20 ஆண்டுகளாக FTTH தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிறுவனம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 110 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 100 உ உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, குறுகிய காலத்திலேயே சென்னை, துரைப்பாக்கத்தில் 110 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் படிக்க :
வேலூரில் மினி டைடல் பார்க்- ஓலா நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
உழவன் செயலி மூலம் விதைப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்-வேளாண்துறை