News

Monday, 10 July 2023 02:07 PM , by: Muthukrishnan Murugan

Increase 25 to 40 percent for procurement of copra says MK stalin

நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசின் ஆதரவு விலை திட்டத்தின் கீழ், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில், இந்தக் கொள்முதல் ஒன்றிய அரசின் அமைப்பான, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (National Agricultural Co-operative Marketing Federation of India Ltd.) மூலம் செய்யப்படுகிறது.

இதனிடையே தமிழ்நாட்டில் 4.46 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 53,518 இலட்சம் எண்ணெய் வித்துக்களும், ஒரு ஹெக்டேருக்கு 11,692 எண்ணெய் வித்துக்களும் உற்பத்தி செய்யப்பட்டு, பரப்பளவிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக அக்கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டாலும், சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருந்ததால், தொடக்க காலங்களில் கொள்முதல் குறைவாகவே இருந்தது என்றும், 2022 முதல், தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் இந்த நிலை முழுவதுமாக மாறியது என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர்.

இதன் விளைவாக, தேங்காய் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-லிருந்து ரூ.1,500-ஆகவும், கொப்பரையின் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500- லிருந்து ரூ.8,100-ஆகக் குறைந்ததனால், 2022 மற்றும் நடப்பாண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு விலை திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்குள், 56,000 மெட்ரிக் டன் என்ற இலக்கில் 47,513 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இன்னும் கொப்பரை கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், சந்தை விலை தொடர்ந்து குறைவாக இருப்பதாலும், ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கொப்பரையின் அளவை அதிகரிக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, நடப்பு பருவத்தில் செப்டம்பர் 2023 வரை கொப்பரை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை, தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கை 56,000 மெட்ரிக் டன்னில் இருந்து 90,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தவும் தொடர்புடைய அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் வேண்டுக்கோள் வைத்துள்ளார்.

அவ்வாறு செய்தால் கொப்பரையின் சந்தை விலையை நிலைப்படுத்த உதவுவதோடு, மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கும் நல்ல பயனளிக்கும் என்று தனது கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

தலைநகர் டெல்லியை புரட்டி போட்ட கனமழை- அரசு அதிகாரிகளின் விடுமுறை ரத்து

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)