News

Monday, 24 April 2023 09:58 AM , by: Muthukrishnan Murugan

Liquor in Marriage Halls- What are the restrictions and conditions?

விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மதுபானம் அருந்த அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. மேலும், மது விலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தற்போது வெளியாகியுள்ள தமிழக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், ஒரு சார்பினர் பூரண மதுவிலக்கினை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி போராடியும் வருகின்றனர். தற்போது தனியார் பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்க அரசு அனுமதியளித்து வந்த நிலையில் தற்போது விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில்  சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழில் F.L.12 என்ற லைசென்ஸ்க்கான கட்டண விவரம், நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும்  திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும், அதேபோல் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற ரூபாய் 11 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் விவரம்:

  • உரிமம் பெற்றவர், நிகழ்ச்சி நடத்துவதற்காக காவல் கண்காணிப்பாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.
  • உரிமம் பெற்றவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் மொத்த விற்பனைக் கிடங்கில் இருந்து அல்லது துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) நியமிக்கும் அல்லது ஒப்புதல் அளிக்கக்கூடிய பிற இடங்களில் இருந்து மட்டுமே மதுபானங்களை பெற வேண்டும்.
  • மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் ஆன்லைனில் பூர்த்தி  செய்யப்பட வேண்டும். நிகழ்ச்சி நடத்தப்படவுள்ள நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்கு முன்னதாக மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) படிவத்தில் F.A.1.14 பூர்த்தி செய்து அனுப்பியிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் அரசு கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் அசல் சலான் நகலின் ரிமிட்டர் நகலுடன், உரிமக் கட்டணத்தை செலுத்திய ரசீதை இணைத்திருக்க வேண்டும்.
  • அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றவுடன், மாவட்டத்தில் உள்ள துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) அதனை சரிபார்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பிறகு, மாவட்டத்தின் முன் அனுமதியுடன் F.L.12 படிவத்தில் சிறப்பு உரிமம் வழங்கப்படும்.
  • சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையர் / உதவி ஆணையர் (கலால்) F.T.P படிவத்தில் போக்குவரத்து அனுமதியைப் பெற்ற பிறகு உரிமம் பெற்றவர் மதுபானத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • உரிமம் செல்லுபடியாகும் காலம் முடிந்த பிறகு கிடைக்கும் மதுபானத்தின் மீதி அளவை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் டிப்போவிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • சிறப்பு உரிமத்தின் கீழ் வாங்கப்படும் மதுபானத்தின் அளவு அதிகமாக இருக்கக்கூடாது
  • உரிமம் பெற்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களைத் தவிர வேறு எந்த மதுபானமும் உட்கொள்ள அனுமதிக்கப்படாது.
  • விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தைத் தவிர மதுபானம் பரிமாறுதல் மற்றும் உட்கொள்ளுதல் கூடாது.
  • பொது இடையூறு, ஒலி மாசு ஆகியவற்றைத் தவிர்க்கவும், பொது அமைதி மற்றும் அமைதியைப் பேணவும் உரிமம் பெற்ற வளாகத்தின் இடம் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் எந்தவித மீறலும் இருக்கக் கூடாது.
  • ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளூர் நாள், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினங்களில் உரிமத்தின் கீழ் மதுபானம் வழங்குதல் மற்றும் உட்கொள்ளுதல் கூடாது.

ஏற்கெனவே தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில், 12 மணி நேரம் வேலை குறித்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், திருமணம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் விற்கலாம் என்கிற அரசின் முடிவுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் காண்க:

பி.ஆர்.பாண்டியன் VS வேளாண் அமைச்சர்- என்ன பஞ்சாயத்து?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)