தென்மேற்கு பருவகாற்று (South west monsoon) காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக அப்பகுதியில் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதே போல் தமிழகத்தில பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை
இந்நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு தனியாருக்கு கொடுக்கப்பட்டதா?
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக
-
ஜூன் 10 மற்றும் ஜூன் 11 வரை மத்திய, தெற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வீசும், மத்திய மேற்கு , வட மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒரிசா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45- 55 கீ.மீ வீசும்
-
ஜூன் 11 வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கீ.மீ வீசும்
-
ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.
-
ஜூன் 13 கோவா மற்றும் அதனை ஓட்டிய கர்நாடக கடலோரப்பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வீசும்
-
ஜூன் 13 மற்றும் ஜூன் 14 தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீ வேகத்தில் வீசும்.
-
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை, கடல் அலை 2.9 முதல் 3.9 மீட்டர் வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேர மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் காரைக்காலில் 3 செண்டிமீட்டர், நாகப்பட்டினத்தில் 2 செண்டிமீட்டர், சங்கரிதுர்க் (சேலம்), ஜெயக்கொண்டாம் (அரியலூர்), நடுவட்டம் (நீலகிரி), செந்துறை (அரியலூர்) தல 1 செண்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.