Vembur residents and farmers staging a protest by holding placards against land acquisition for SIPCOT (Pic credit: Wikipedia)
எட்டயபுரம் அருகே வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விவசாயிகள் அஞ்சல் அட்டை அனுப்பினர். மேலும் சிப்காட் அமைக்கும் முடிவை அரசு கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Read more:
பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூரில் சுமார் 2700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. 2700 ஏக்கர் என்றால், வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நிலங்களை கையகப்படுத்தப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சுமார் 11 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு சிப்காட் தொழில் பூங்காவுக்குரிய நிலங்களை பார்வையிடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, சிப்காட் தொழில் பூங்காவுக்கு தனியார் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். மானாவாரி நிலங்களை கையகப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 28-ம் தேதி எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற வெம்பூர், பட்டிதேவன்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதிக்கு சிப்காட் தேவையில்லையென ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இன்று சிப்காட் வேண்டாமென தெரிவித்து முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் வெம்பூரில் நடந்தது. வெம்பூரில் பிரதான சாலையில் இருந்து ஊர்வலமாக சென்ற கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அங்குள்ள அஞ்சல் பெட்டியில் முதல்வருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.
போராட்டத்தில், வெம்பூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மு.திருப்பதி, தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால், கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மற்றும் திரளான விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயமே போதும். வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்” என, எட்டயபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: