News

Wednesday, 22 March 2023 03:34 PM , by: Muthukrishnan Murugan

Pinarayi's letter to TN cm for asking him to participate in Vaikam centenary celebrations

வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெற உள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தினை இன்று கேரள மீன்வளத்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கினார்.

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டமாக இன்றளவும் கருதப்படுவது வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டன.

இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் திருவாளர்கள் டி.கெ.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று தீவிரமாக செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி அவர்களும் இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், மறுமலர்ச்சி நாயகர் தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் காரணமாக, தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக பெரியார் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23 ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01.04.2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள, தமிழ்நாடு மாநில முதலமைச்சர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டுமென கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தினை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (22.03.2023) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சரும், கேரள முதல்வர் பினராயின் வேண்டுக்கோளினை ஏற்று வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள தனது இசைவினை வந்திருந்த கேரள மீன்வளத்துறை அமைச்சர் சாஜி செரியனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

நம்ம குடிக்கிறது பாதுகாப்பான குடிநீர் தான? அதிர்ச்சி அளித்த ஐ.நா.வின் ரிப்போர்ட்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)