கோழி இறைச்சிக் கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரித்த கேரளக் கால்நடை மருத்துவருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவை (Fuel required)
பெட்ரோல், டீசல் ஆகிய வாகன எரிபொருட்கள் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்குரிய மாற்று எரிபொருட்கள் மீதான ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது.
ஆராய்ச்சிகள் (Research)
எத்தனால் பயன்பாடு, உயிரி எரிபொருள், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில் கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரும், பேராசிரியருமான ஜான் ஆபிரகாம், கோழி இறைச்சிக் கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார்.
அதிகக் கொழுப்புச் சத்து (High in fat)
கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம் என்பதால், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு பயோடீசலைத் தயாரித்துள்ளார் அவர். அவர் தயாரித்த பயோடீசல் மூலமாக இயங்கிய வாகனங்கள் ஒரு லிட்டருக்கு 38 கிலோமீட்டர் வரை சென்றன. அதே வேளையில் அதன் விலை தற்போதைய டீசல் விலையுடன் ஒப்பிடுகையில், வெறும் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது.
மாசுபாடு குறைவு (Pollution reduction)
டீசல் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைவிட பயோடீசல் மூலமாக ஏற்படும் மாசுபாடு பாதியளவுக் குறைந்து காணப்பட்டது. கோழி இறைச்சிக் கழிவுகள் மூலமாக பயோடீசல் தயாரிக்கும் நடைமுறைக்குக் காப்புரிமை கோரி ஜான் ஆபிரகாம் கடந்த 2014ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதற்கான காப்புரிமையை இந்தியக் காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளது.
பட்டத்திற்காக (For the Degree)
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியாக இந்த பயோடீசல் நடைமுறையை ஆப்ரகாம் உருவாக்கினார்.
காப்புரிமை (Patent)
ஆனால் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் சார்பில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டதால், தற்போது காப்புரிமை பல்கலைக்கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...