Animal Husbandry

Wednesday, 28 October 2020 06:07 PM , by: Elavarse Sivakumar

உடலில் கால்சியத்தின் அளவு மிகவும் நுணுக்கமாக அனுசரிக்கப்படுகிறது. கால்நடைகளில் கால்சியம் பெரும்பாலும் சிறுகுடல் பகுதியிலேயே உறிஞ்சப்படுகின்றது. சிறுநீரகம், குடல் எலும்பு போன்றவையே கால்சியத்தின் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பேராதைராய்டு, கால் சிடோனின், வைட்டமின் D, ஆகியவற்றால் கால்சியத்தின் அளவுக் கட்டுப்படுத்தப்படுவதால், அதன் அளவு இரத்தத்தில் குறையும் போது இவற்றின் செயல்பாடுகளும் குறைந்ததற்கான அறிகுறிகள் தென்படும்.

அறிகுறிகள் (Symptoms )

  • பால்குறைந்து போகுதல்

  • எலும்பு வலுவிழந்து போதல்

  • எலும்புகளில் வளர்ச்சியின்மை

  • பற்சிதைவு

  • விரைவில் பற்கள் விழுதல்

  • உடல் உறுப்புகளின் இயங்கு சக்தி குறைந்து போகுதல்

  • சரியாக சினைப்பருவத்திற்கு வராமலிருத்தல்

  • சினைப்பிடிக்காமல் தள்ளிப் போகுதல்

  • கன்று ஈனும் தருவாயிலுள்ள மாடுகளில் கர்ப்பப்பை இயக்கம் குறைந்து கன்றை வெளித்தள்ள இயலாமை

  • கன்று ஈன்ற பின் நஞ்சுக்கொடி வெளியேறாமல் இருத்தல்

தீர்வுகள்  (Remedies)

1. சுண்ணாம்புச்சத்தானது பொதுவாகப் புரதம் அதிகமுள்ள தானிய வகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக காரமணி, அவரை, துவரை, சுண்டல் மற்றும் பட்டாணி வகை விதை களிலும், இவற்றின் பொட்டுக்கள் மற்றும் உலர் தட்டுக்களிலும் அதிகமாக உள்ளன.

2.எலும்பு மற்றும் இறைச்சிக் கழிவுகளிலும், எலும்புத் துகள்களிலும், மீன் கழிவுகள் மற்றும் துகள்களிலும், கடல் நத்தை ஓடுகள் மற்றும் கிளிஞ்சல்களிலும் கால்சியம் பாஸ்பேட் பாறைப் படிமங்களிலும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

3. சுண்ணாம்புச்சத்தை உணவின்வழிக் கொடுப்பதே சாலச் சிறந்தது. அவ்வாறு கொடுக்கும் பொழுது உணவில் கால்சியம் பாஸ்பரஸ் விகிதாச்சாரம் 1:2 என்ற அளவில் இருக்க வேண்டும்.

 4.கால்நடைத் தீவனங்களான புற்கள் மற்றும் தானிய வகைகள் அதிக பொட்டாசியம் சத்து கொண்டவை. எனவே, அவற்றின் உணவில் சுமார் 1 விழுக்காடு அளவிற்குச் சாதாரண உப்பைச்சேர்த்துக் கொண்டால் சுண்ணாம்பு மற்றும் சோடியம் சத்துக்களைநிலை நிறுத்த உதவும்.

5. கால்நடைகளை அதிக உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வதினால் அவற்றின் பசி தூண்டப்பட்டுச் சுண்ணாம்புச்சத்து சமநிலையில் இருக்கும்.

6.தேவைப்படும் பட்சத்தில் கால்சியம் குழம்புகள் மருந்துகளாகக் கிடைக்கின்றன. விவசாயிகள் தக்க அறிவுரையுடன் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தகவல்

மரு.க.செந்தில் குமார்

உதவிப் பேராசிரியர்

சிகிச்சைத்துறை

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல்

மேலும் படிக்க...

கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!

நெல்லில் புகையான் பூச்சித் தாக்குதல்- கட்டுப்படுத்த சில வழிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)