Animal Husbandry

Wednesday, 23 September 2020 07:19 AM , by: Elavarse Sivakumar

மாவுச்சத்து, புரதச்சத்து, ஊட்டச்சத்து, தாது உப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் தன்னகத்தேக் கொண்டுள்ள சீம்பால், கன்றுக்குட்டிக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியம் தரவல்லது.

சீம்பால் (Colostrum)

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று மாட்டில் இருந்து வரும் சீம்பால், கன்றுக்கு ஜீரணத்தைத் தூண்டி செரிமானத்தை சீராக்குகிறது. கன்று ஈன்றவுடன் தாய்ப் பசுவின் மடியில் சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலானது இரத்தத்திலுள்ள புரதத்திலிருந்து சில நிணநீர்களின் தூண்டுதலால் கன்று ஈனுவதற்குச் சில வாரங்கள் முன்னரே மடியில் உருவாக்கப்படுகிறது.

சீம்பாலில் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி போன்றவை அதிக அளவில் உள்ளன.

பாதுகாப்புக் கொடை

  • சீம்பாலில் அதிக அளவில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள், கன்றுகளை நோய்க் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கின்றன. அதனால் சீம்பாலை கன்றுகளுக்கு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு கொடையென்றே கூறலாம்.

  • சீம்பாலில் சாதாரண பாலை விடை ஏழு மடங்கு புரதச் சத்தும் இரண்டு மடங்கு மொத்த திடப் பொருளும் அதிகமாக உள்ளன. சீம்பால் மலமிளக்கியாக செயல்பட்டு பிறந்த கன்றின் குடலில் உள்ள மலத்தை வெளியேத்தள்ள உதவுகிறது.

Credit: Shutterstock

  • சீம்பாலானது கன்றின் வயிற்றைத் தாண்டி சிறுகுடலுக்கு செல்லும் பொழுது உட்கிரகிக்கப்படுகிறது. சிறுகுடலில் சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை உட்கிரகிக்கும் திறன், கன்று பிறந்த சில மணி நேரத்தில் அதிகமாகவும், அடுத்த சில மணி நேரங்களில் படிப்படியாகக் குறைந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு முற்றிலுமாகக் குறைந்து விடுகின்றது.

  • அதனால் கன்றுகள் பிறந்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் முதல் கட்ட சீம்பாலும் 10 மணி முதல் 12 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்டச் சீம்பாலும் போதுமான அளவு அதாவது கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும்.

  • மாட்டின் சீம்பால் அதிக அளவு காணப்பட்டால் அதிகப்படியாக உள்ள சீமபாலை கறந்து விட வேண்டும். இல்லையெனில் கன்றுகள் அதிகமாகக் குடித்து கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்

  • அதிகமான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைத்து பிற கன்றுகளுக்கு அல்லது அனாதைக் கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.

  • சில நேரங்களில் உடல் பலவீனம், சோர்வு போன்ற காரணங்களினால் கன்றுக் குட்டி சீம்பால் குடிக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது நாம் பால் புட்டி மூலமாக சீம்பாலைக் கொடுக்க வேண்டும்.

செயற்கை சீம்பால்

சீம்பால் கிடைக்காத பட்சத்தில்,  "செயற்கை சீம்பால்" தயாரித்துக் கன்றுகளுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு முட்டை 1, தண்ணீர் 300 மி.லி, விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி, பால் 500 மி.லி கலந்து செயற்கை சீம்பால் தயாரித்து பிறந்த கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்க வேண்டும். எனவே கன்றுகளுக்கு குறித்த நேரத்தில், குறிப்பிட்ட அளவு சீம்பால் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

தகவல்
டாக்டர். இரா.உமாராணி,
பேராசிரியர்,
கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்.
திருப்பரங்குன்றம். மதுரை

மேலும் படிக்க...

PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!

100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)