விரைவில் அழுகிப்போகக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை விரைந்து சந்தைப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 50% மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் சரக்கு ரயில் சேவை
விரைவில் அழுகிப் போகக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்வதற்காக இந்திய ரயில்வே துறை சார்பாக கிசான் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த சரக்கு ரயில் சேவை குறித்து பெரும்பாலான விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு 50% மானியம்
இதன்படி, குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இந்த கிசான் ரயில் சேவையில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கிசான் ரயில் சேவையைப் பயன்படுத்தும் விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகமும், உணவு பதப்படுத்துதல் அமைச்சகமும் இணைந்து அறிவித்துள்ளது. இந்த மானியத் தொகையை உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி முதல் இந்த மானியத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
எந்தெந்த காய்கறி & பழங்களுக்கு மானியம்
மாம்பழம், சாத்துக்குடி வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, லிச்சி, கிவி, அன்னாசி, பலாப் பழம், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பாதாம் பழம் ஆகிய பழங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும். அதேபோல, காய்கறிகளைப் பொறுத்தவரையில், தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடமிளகாய், வெள்ளரிக்காய், பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு மானியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மானியம் வழங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவு குறைவுதான் என்றாலும். எதிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொன்னதை செய்த மத்திய அரசு
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, விவசாயிகளுக்கான முதல் கிசான் சரக்கு ரயிலை தேவ்லாலியில் இருந்து தனபூர் வரையிலும், அனந்த்பூர் முதல் டெல்லி வரையிலும் ரயில்வே துறை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!
எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!
விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...