News

Tuesday, 12 April 2022 04:32 PM , by: Poonguzhali R

Tamil Nadu opposes CUET entrance exam!

மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. Common University Entrance Test (CUET) என்ற இந்த தேர்வு, வரும் ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு எதிராகத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றம் செய்துள்ளார். தீர்மானத்தின் போது பேசிய அவர் கீழ்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

 மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23-ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த தேர்வின் மூலம் கிடைக்கும் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல எனவும், இது அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பினை வழங்காது எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நீட் தேர்வைப் போன்று இந்த தேர்விற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு வரும்,  பயிற்சி மையங்கள் ஆங்காங்கு தெருவிற்கு ஒன்று என வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும் எனவும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, இந்த தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வில் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என யுஜிசி அறிக்கையில் உள்ளதாகவும், நீட் தேர்வும் இதே போன்று விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த  நிலை இப்படியே நிலவினால் இந்த நுழைவுத்தேர்வை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். பின்னர் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது ஆசிரியர்!

கோடைகாலத்தில் குழந்தைகளைப் பராமரிக்கச் சில குறிப்புகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)