பயிர் காப்பீடு - Crop Insurance

Monday, 17 August 2020 04:49 PM , by: Daisy Rose Mary
Crop Insurance

பேரிடர் மற்றும் காலமாற்றம் காரணமாக பயிர் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பொருளாதார ரீதியாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்கிறது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம்.

வெள்ளம், வறட்சி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவை சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை பாதிப்பதோடு, வேளாண் பிரிவில் தொய்வு நிலையை ஏற்படுத்துவதுடன் விவசாயிகளின் வறுமையை அகற்றவல்ல திறனையும் பாதிக்கிறது. இது போன்ற பேரிடர் காலங்களில், பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை பேரிடர்களால் பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், பண்ணை வருவாயை நிலைப்படுத்தி வேளாண் பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை உறுதி செய்தல் போன்ற பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY - Pradhan Mantri Fasal Bima Yojana)

வேளாண் பயிர்களுக்காக முதன்முதலில் தொடங்கப்பட்ட தேசிய வேளாண் பயிர் காப்புறுதி திட்டத்திலிருந்து பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் தான் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம்.

திருத்தி அமைக்கப்பட்ட காப்பீடு திட்டம் - PMFBY 2020

பிரதமரின் பசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் (PMFBY/RWBCIS) ஆகியன திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் 2020 காரீஃப் (Kharif) பருவத்திலிருந்து செல்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் மானியமானது, (Government Subsidy) பாசன வசதி இல்லாத பகுதிகளில் பயிர்களுக்கான பிரீமியம் விகிதம் 30 சதவீதமாகவும், பாசன வசதி உள்ள பகுதிகளில் பயிர்களுக்கான பிரீமியம் விகிதம் 25 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாசன வசதி பெற்ற மாவட்டங்கள், முழுமையான பாசன வசதி பெற்ற பகுதி அல்லது மாவட்டமாகக் கருதப்படும்.

காப்பீடு விதிமுறைகள் - Guidliness for Crop Insurance

  • காப்பீடு செய்யப்பட்ட பகுதி விதைப்பு (Sowing) முதல் அறுவடை (Harvesting) வரை காப்பீட்டில் கிழ் கொண்டுவரப்படுகிறது.

  • இத்தகையை சூழலில் பருவம் தவறி பெய்யும் மழை, அபாயகரமான பருவநிலை மாற்றங்கள், மழை பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளை இந்த காப்பீடு திட்டம் ஏற்கும்.

  • வறட்சி, வெள்ளம், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள், நிலச்சரிவுகள், இயற்கை காரணங்களால் ஏற்படும் தீ, மின்னல், புயல், ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி போன்ற தடுக்க முடியாத இயற்கை இடர்பாடுகளுக்கு இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

  • அறுவடையில் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரை மட்டுமே பயிர் காப்பீடு பொருந்தும்.

  • குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் இயற்கை சீற்றங்களான மின்னல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம், மேக வெடிப்பு மற்றும் இயற்கை தீ ஆகிய உள்ளூர் ஆபத்துகள்அடையாளம் காணப்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்ட காப்பீட்டு பயிர்களுக்கு நிவாரணம் பெற முடியும்.

  • பயிர் இழப்பு ஏற்பட்டால் அதனை உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியம்.

பயிர் காப்பீடு செய்வதற்கான காலம் - Crop insurance period 

  • ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ''காரீப்ஃ'' (Kharif) பருவமாகவும்

  • அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ''ரபி'' (Rabi) பருவமாகவும் கணக்கிடப்படுகிறது.

  • இதற்கான காப்பீடு தேதி மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது.

  • இது தொடர்பாக கூடுதல் விவரங்களை வேளாண்மை அலுவலகங்கள் வழங்கும்.

எந்த பயிர்களை காப்பீடு செய்யலாம்? - What are the Crops insured 

  • உணவு பயிர்களான நெல், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சிறுதானியங்கள்

  • நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள்

  • கரும்பு, தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள்

யார் இந்த திட்டத்தில் சேரலாம்? - Who can join in PMFBY

  • மேற்குறிப்பிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்யலாம். குத்தகை எடுத்து வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளும் காப்பீடு செய்யலாம்.

  • பயிர் கடன் மற்றும் விவசாய கடன் அட்டை பெற்ற விவசாயிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த பயிர்க்காப்பீடு திட்ட நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

  • விருப்பம் உள்ள விவசாயிகளும், காப்பீடு கோரும் விவசாயிகள் மட்டுமே தேவைப்படின் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

காப்பீடுத் தொகை & கட்டணம் - Premium for Crops

கடன் பெற்றுள்ள மற்றும் பெறாத விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான காப்பீட்டுத் தொகையும், சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ற காப்பீடுத் தொகையும் நிர்ணயம் செய்யபடும்.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் (PMFBY) காரீஃப் பயிர்களுக்கு 2%, ராபி பயிர்களுக்கு 1.5%, தோட்டக்கலை பயிர்களுக்கு 5% காப்பீடு கட்டணமாக விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது பொதுச் சேவை மையத்தை அணுகி முறையான ஆவணங்களுடன் பீரிமிய கட்டணத்தை செலுத்தி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

இந்த பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் வெள்ளம் மற்றும் வறச்சி போன்ற காரணங்களால் விதைப்பு செய்யமுடியாத விவசாயிகளும் இந்த காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

Crop insirance பயிர் காப்பீடு PMFBY Pradhan Mantri Fasal Bima Yojana
English Summary: Crop insurance

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.