![Rain Water in Agri land](https://kjtamil.b-cdn.net/media/9920/rain.jpg?format=webp)
திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு (Paddy Crops) உரமிடும் பணி மற்றும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுகளில் உடைப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து ஒரு வாரம் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் உடைப்பு எடுத்து வெள்ளநீர் (Flood) தாழ்வான பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி மாவட்டத்தில் சாகுபடி (Cultivation) செய்யப்பட்டுள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்களில் 90 சதவீதம் அளவிற்கு மழை நீரில் மூழ்கின. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.
வெள்ளநீரை வடிய வைக்கும் பணி:
கடந்த 4 தினங்களாக மழை ஓய்ந்து சற்று வெயில் அடித்து வரும் நிலையில் ஆறுகளில் நீரின் அளவு குறைந்து செல்வதன் காரணமாக வாய்க்கால் மற்றும் வடிகால்களிலும் (Drainages) வெள்ள நீர் குறைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது வயல்களில் இருந்து மழை நீரை வடிய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி தாளடி மற்றும் சம்பா பயிர்களுக்கு உரமிடும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிவர் மற்றும் புரெவி புயல்களின் அடுத்தடுத்த தாக்குதலால், பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் கவலையடைந்த விவசாயிகள், இப்போது மழைநீரை வயல்களில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!
Share your comments