![Jayalalithaa death case- report: Sasikala, Vijayabaskar inside the investigation ring!](https://kjtamil.b-cdn.net/media/25652/ja1.jpg?format=webp)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், அறிக்கைகளை, சட்டசபையில் தாக்கல் செய்வது என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மே 18ல் அரசிடம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பரிசீலனை
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 17 போலீசார், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனையில் உள்ளன. அந்த துறைகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அதற்கான விபர அறிக்கையுடன், கமிஷன் இறுதி அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், 27ம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையும் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை பெற முடிவு
இந்த அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைப்படி, சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது, விசாரணைக்கு உத்தரவிட, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள் பெற முடிவு செய்யப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அது தொடர்பான விபர அறிக்கையுடன், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments