1. செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், தேங்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

காரீப் பருவ துவக்க நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளோடு காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்திய உணவு கழகத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அதன்மூலம் நெல் கொள்முதல் செய்து வழக்கம். இதற்கான காரீப் பருவம் என்பது அக்டோபர் 1-ம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு செப்.30-ம் தேதி நிறைவடையும். இந்த காரீப் பருவத்தில் தான் விவசாயிகளின் நெல்லுக்கு புதிய விலையும், ஆதர விலையும் சேர்த்து வழங்கப்படும். அதே போல் கொள்முதல் இலக்கு, நடைமுறைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஏற்றார்போல் பணிகள் துவங்கும்.

கொள்முதல் பணிகள் தாமதம்

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறுவை சாகுபடி என்பது நிகழாண்டு முன்கூட்டியே துவங்கி விட்டது. வழக்கமாக அக்டோபரில் தொடங்க வேண்டிய அறுவடை என்பது, நிகழாண்டு செப்டம்பர் மாதமே துவங்கியதால், 166 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து ஆண்டு இறுதி கணக்குகளை முடிக்க வேண்டும் என்பதால் கடந்த செப்.25-ம் தேதியோடு 166 கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் நிறுத்தப்பட்டு, அக்.1-ம் தேதி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்

இதனால், குறுவை அறுவடையை செய்த விவசாயிகள் அக்.1- ம் தேதி கொள்முதல் நிலையங்கள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை, மருங்குளம், கா.கோவிலூர், அம்மாபேட்டை, கொக்கேரி, சாலியமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 2 ஆயிரம் மூட்டைக்கு குறையாமல் குவிந்துள்ளது. மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்வதால் நெல்மணிகள் ஈரமாகி முளைக்க தொடங்கி யுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து கொல்லாங்கரை விவசாயி சுகுமார் கூறியாதவது: எங்களது பகுதியில் பத்து கிராமங்களில் சுமார் 1,200 ஏக்கரில் பம்பு செட் மூலம் குறுவை அறுவடை முடிந்து விற்பனைக்காக நெல்களை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளோம். கடந்தாண்டு தேக்கமடையால் கொள்முதல் செய்ததால், அதனை நம்பி நாங்கள் நெல்களை விற்பனைக்காக கொண்டு வந்தோம். கடந்த 15 தினங்களாக நெல்கள் வந்துள்ளது. தஞ்சாவூரில் அதிகாரிகளை அணுகி விவரங்களை எடுத்து கூறியபோது, அக் 1- ல் புதிய விலையோடு கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை கொள்முதல் செய்யவில்லை, வெகு சிரமத்துக்கிடையே அறுவடையே செய்தும் அதனை விற்பனை செய்ய முடியாமலும், தனியார் வியாபாரிகள் இந்த தருணத்தை பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு, குறைத்து கேட்பதால் விற்க முடியாமலும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என்றார்.

கூடுதல் கொள்முதல் நிலையங்கள்

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு கூறியதாவது: கடந்த காரீப் பருவத்தில் 7 லட்சத்தி 72 ஆயிரத்தி 11 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட்ட 166 கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை அங்கிருந்து எடுத்துவிட்டு, புதிய கொள்முதலை தொடங்கியுள்ளோம். 166 கொள்முதல் நிலையங்களோடு புதிதாக 60 கொள்முதல் நிலையங்கள் என 226 கொள்முதல் நிலையங்கள் திறக்க பணியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் விலை

பணியாளர்கள் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று கொள்முதல் பணியை துவங்குவதிலும், புதிய விலையாக குவிண்டாலுக்கு சன்னரகத்துக்கு ரூ.1905 லிருந்து ரூ.1958 ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.1865 லிருந்து ரூ.1918 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையை நெட்வொர்க்கில் ஏற்றிய பின்னர் கொள்முதல் பணி தொடங்கும், கொள்முதலில் தொய்வில்லாமல் பணிகள் நடைபெறும் என்றார்.

மேலும் படிக்க.... 

பண்டிகைகள் வருது... சந்தைகளை திறங்க...! - கால்நடை வியாபாரிகள் கோரிக்கை!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!

எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரை ஆலைகளுக்கு கடன் சலுகை! - முழு விபரம் உள்ளே!

English Summary: Bundles of stagnant paddy get soaked in the rain without the paddy purchasing stations being opened farmers suffer Published on: 02 October 2020, 08:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.