
Coal issue - Farmers' association thanked the CM MKstalin
நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலலமைச்சர் (4.4.2023) அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை இரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை இரத்து செய்தது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (11.4.2023) தலைமைச் செயலகத்தில், நாகப்பட்டினம் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவரும், காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான காவிரி தனபாலன், திருவாரூர் மாவட்டம் காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் வி.சத்தியநாராயணா, மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் குரு கோபி கணேசன், நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வி.சரபோஜி, தஞ்சாவூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் வி.கோவிந்தராஜ், தஞ்சை விவசாய சங்கத்தின் வி. ஜீவகுமார், திருச்சி மாவட்டம் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பூவை விசுவநாதன், கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி. இளங்கீரன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதனைப்போல் கடலூர் மாவட்டம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் அக்ரி கா. பசுமை வளவன், நாகப்பட்டினம் மாவட்டம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் மா. வினோத் குமார், நாகப்பட்டினம் மாவட்டம் பட்டதாரிகள் விவசாயிகள் இளம் சங்கத்தின் தலைவர் மா. பிரகாஷ், அரியலூர் மாவட்டம் - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. தங்க தர்மராஜன், கடலூர் மாவட்டம் - வீராணம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தமிழ்வளவன், கடலூர் மாவட்டம் - உழவர் காவிரி டெல்டா பாசன மன்றத் தலைவர் குஞ்சிதபாதம், கடலூர் மாவட்டம் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் செல்வகுமார், கடலூர் மாவட்டம் கீழனை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் கே. பிரபாகரன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
இச்சந்திப்பின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சிந்தனைச் செல்வன், கோ. அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் காண்க:
The Ocean Cleanup- கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் புதிய மைல்கல்
Share your comments