![Engineering Graduates Achieved in agriculture](https://kjtamil.b-cdn.net/media/9538/banana.jpg?format=webp)
உழைப்பை மூலதனதாக்கி, உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வந்த விலைக்கு விற்று நஷ்டம் அடைகின்றனர். பயிர் வளர சில காலம் எடுத்துக் கொள்வது போல, விளைந்த பொருட்களை விற்பதற்கும் நிதானம் காட்டி, பொறுமையாக விற்றால், இலாபம் பார்க்கலாம். ஆனாலும், எல்லா வகை உணவுப் பொருட்களுக்கும் இது சாத்தியமாகாது. உழைக்கும் விவசாயிகள், விற்பனை நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
அறுவடை முதல் உற்பத்தி வரை:
அறுவடை (Harvest) வரை உற்பத்தி செய்த நாமே அவற்றை மதிப்புகூட்டி விற்க வேண்டும் என நினைத்து சாதித்து காட்டியுள்ளனர்,
அரியலுார் மாவட்டம் காரைப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் சுதர்சன் சேதுராமன், சரவணன் சச்சிதானந்தம். சுதர்சன் ஆகிய 3 இன்ஜினியரிங் பட்டதாரிகள் (Engineering graduates). பரம்பரையாக விவசாய குடும்பம் என்பதால் படித்து முடித்த கையோடு விவசாயத் தொழிலுக்கு வந்துவிட்டார்கள். சரவணன் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து, சிங்கப்பூரில் (Singapore) இரண்டாண்டுகள் வேலை செய்தபின், மீண்டும் விவசாயத்துக்கு திரும்பியுள்ளார். இயற்கை விவசாயத்தில் (natural agriculture) நெல்லை அரிசியாக மாற்றியும், கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றியும் லாபம் ஈட்டும் அனுபவத்தை விளக்குகின்றனர்.
இயற்கை விவசாயப் பயணம்
3 மாத பயிர்கள் முதல் ஆண்டுப் பயிர்கள் வரை ரகம் வாரியாக பயிர் செய்கிறோம். 17 ஏக்கரில் இயற்கை விவசாயம் மட்டும் தான். அதில் வரப்போரம் வாழை (Banana) நட்டுள்ளோம். இதில் அதிக லாபம் கிடைக்காது. வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துகிறோம். உள்கூட்டில் கரும்பு விவசாயமும், எட்டடி பட்டத்தில் நடவு செய்துள்ளோம். நடுவில் ஊடுபட்டமாக வெங்காயம் (Onion), சோளம், குதிரைவாலி, கம்பு பயிரிட்டுள்ளேன். செடி முருங்கைகள் மூலம் காய்கள் நிறைய கிடைக்கின்றன.
நெல்லில் மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி பயிரிட்டுள்ளோம். இது 6 மாத பயிர். அறுவடை முடிந்ததும் நெல்லாக விற்பதில்லை. நாங்களே அரிசியாக்கி விற்பதால், போதுமான லாபம் கிடைக்கிறது. நெல்லை மரக்கலத்தில் சேமித்து தேவைக்கேற்ப அரிசியாக்குகிறோம். கரும்பை ஆலைக்கு அனுப்பாமல் நாங்களே பிழிந்து சாறெடுத்து நாட்டு சர்க்கரை (Jaggery Powder) தயாரிக்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெங்காயம், சோளம் போன்றவை 3 ஆம் மாதத்தில் லாபம் கிடைக்கும். வாழை நட்ட ஆறாம் மாதத்திலிருந்து பலன் கிடைக்கும். கரும்பு ஆண்டுப் பயிர். சில நேரங்களில் கத்தரி, வெண்டை, எள் பயிரிடுவோம். குதிரைவாலி, கம்பு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
இயற்கை உரப் பயன்பாடு:
ஆறு நாட்டுமாடுகள் (Cows) வளர்க்கிறோம். இதன் சாணம், கோமியத்திலிருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை முடிந்தபின், மாட்டுச்சாண எருவால் நிலத்தை தயார் செய்கிறோம். பயிர்களின் வளர்ச்சிக்கு பஞ்சகாவ்யம், மீன் அமிலம் (Fish acid) உற்பத்தி செய்கிறோம். கரும்புக்கு பூச்சித் தொல்லை இல்லை. நெல்லுக்கு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இஞ்சி, பூண்டு, நொச்சி இலை, வேப்பிலையுடன் (Neem) கோமியத்தை கலந்து ஏழு நாட்கள் ஊறவைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்தகிறோம்.
இயற்கை விவசாயத்தில் முதலில் லாபமே கிடைக்கவில்லை. வீட்டுச் செலவுக்கு மட்டும் கட்டுப்படியானது. நாங்கள் கூட்டுக்குடும்பம் என்பதால் செலவுகளை சமாளித்தோம். இப்போது லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளோம் என்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் ஐந்தறிவு ஜீவன்கள்!
பசை தயாரிப்பால் வீணாகும் விவசாய உரங்கள்! 42 டன் யூரியா பறிமுதல்!
Share your comments