1. வெற்றிக் கதைகள்

இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலி சம்பா

KJ Staff
KJ Staff
sathishkumar, subramaniyan

இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக இயற்கை விவசாயம் குறித்து தன் தந்தையிடம் எடுத்துக் கூறி பெரும் முயற்சிக்கு பிறகு, அவரை இயற்கை விவசாயத்திற்கு மாற்றி இருக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்.

இயற்கை விவசாயி சதீஷ்குமார்

நான் சென்னையில் வேலை பார்த்து வசித்து வருகிறேன். மாசம் ஒரு முறைதான் சொந்த ஊருக்கு வருவேன். தாத்தா காலத்திலிருந்து விவசாயம் செய்துவருகிறோம். நான் ஊருக்கு வரும்போதெல்லாம் வயலுக்கு செல்வேன். எங்கள் வயலில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி, உரம் எனக்கு சேராது அதற்காக இன்டர்நெட்டில் தேடியபோது இயற்கை விவசாயம், நம்மாழ்வார் ஐயா, பசுமை விகடன் ஆகியவற்றை பற்றி தெரிந்தது.

நம்மாழ்வார் ஐயா பேசிய வீடியோக்களை பார்த்த பிறகு தான் தெரிந்தது இரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று. இதையெல்லம் என் அப்பாவிடம் கூறிய போது அவர் எதையுமே கேட்கவில்லை. போன வருடம் அப்பாவை அழைத்துக்கொண்டு  வானகம் பண்ணையில் நடந்த இயற்கை விவசாய பயிற்சியில் கலந்துகொண்டோம்.

பயிற்சிக்கு பிறகு அப்பாவுக்கு சிறிது நம்பிக்கை வந்தது. பயிற்சிக்கு பிறகு ஒரு ஏக்கர் நிலத்தில் தொழு உரம் போட்டு பலதானியங்களை விதைச்சு மண்ணை வளமாக்கி இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தோம். மேலும் இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்கள் இருவரின் ஆலோசனை படி போன் கார்த்திகை மாதம் 80 சென்ட் நிலத்தில் கிச்சிலி சம்பா நெல்லை விதைச்சு இயற்கை முறையில் பயிரிட்டோம். முதல் முறையாக கிச்சிலி சம்பாவை மட்டும்தான் இயற்கை முறையில் சாகுபடி செய்திருக்கோம். எப்படியும் 80 சென்ட் நிலத்தில் 15 கோட்டை நெல் (ஒரு கோட்டை என்பது 144 கிலோ) கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த போகத்துல மொத்த நிலத்தையும் இயற்கை முறையில் தான் நெல் சாகுபடி செய்யப்போகிறோம். 

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

subramaniyan organic farming

80 சென்ட் நிலத்தில் இயற்கை  முறையில் கிச்சிலி சம்பா சாகுபடி செய்யும் முறைகல். கிச்சிலி சம்பா சாகுபடி செய்ய கார் (வைகாசி) மற்றும் சம்பா (கார்த்திகை) பட்டங்கள் ஏற்றவை. தேர்ந் தெடுத்த 80 சென்ட் நிலத்தை உழுது, பல தானிய விதைப்பு செய்ய வேண்டும். அவற்றில் பூவெடுத்தும் மடக்கி உழுது 3 டிராக்டர் மட்கிய சாணத்தை கொட்டிப் பரப்பி நன்கு உழ வேண்டும்.

5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைத்துக்கொள்ள வேண்டும். ௧௦ கிலோ கிச்சிலி சம்பா விதை நெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மேலே மிதந்து வரும் கழிவுகளை  அப்புறப்படுத்தி விட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். விதை நெல்லை ஒரு சணல் சாக்கில் போட்டு கட்டி, வைக்கோலை மூடாக்காகப் போட்டு விட வேண்டும். அடுத்த நாளில் விதைநெல் மணிகளில் முளைப்பு எடுத்திருக்கும். முளைப்பு எடுத்த நெல் மணிகளை நாற்றாங்காலில் தூவி விட வேண்டும்

ஒரு வாரத்துக்குள் விதைகள் முளைத்துவரும். 8-ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்தை நாற்றாங்காலுக்கான பாசன நீரில் கலந்து விட வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் நாற்றுக்கள் நடவுக்குத் தயாராகிவிடும். 

10 லிட்டர்  தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவை ஊற்றி அக்கரைசலில்  நாற்றுக்களின் வேர் மூழ்கும்படி வைத்து எடுத்து, பிறகு முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடவு செய்ய வேண்டும். 20-ம்  நாள் களை எடுத்து 180 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்து  பாசனம் செய்ய வேண்டும்.தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுத்து வர வேண்டும். 30- நாளில் இருந்து 18 நாட்களுக்குள் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவை கலந்து தெளித்து வர வேண்டும்.

பூச்சிகள் தென்பட்டால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும். 70-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து 80-ம் நாளுக்கு மேல் கதிர்களில் பால்  பிடிக்கும். 110-ம் நாளுக்கு மேல் கதிர்கள் முற்றத் துவங்கும். 140-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

K.Sakthipriya
krishi Jagran

English Summary: Son and Father doing organic farming : cultivating traditional rice kichili samba Published on: 24 July 2019, 03:06 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.