Neera Banam
தென்னை விவசாயிகளை ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியை வெற்றிகரமாக கையில் எடுத்து, மதிப்பு கூட்டப்பட்ட ‘நீரா’ பானத்தை இன்று ‘டெட்ரா பேக்’ மூலம் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது, பல்லடத்தில் உள்ள உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
‘நீரா’ பானத்தை பேக்கிங் செய்து விற்பது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக காசர்கோடு மத்திய ஆராய்ச்சிக் கூடத்தின் ஒப்புதல் பெறப்பட்ட, பிரத்யேக சிறிய ரக குளிர்பதன பெட்டி தயாரித்து, தென்னை மரங்களில் உள்ள பாளையை சீவி அதிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு நீராவும் வீணாகாதபடி குளிர்பதன பெட்டியை மரத்தில் தொங்கவிட்டு கவனத்துடன் சேகரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
12 மணி நேரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு தென்னை மரத்தில் இருந்தும் நீராவை இறக்கி, பிரத்யேக சில்வர் கேன்களில் சேகரித்து, எவ்வித வேதிப்பொருட்களும் கலக்காமல், அதன் தன்மையிலேயே குளிரூட்டி பாதுகாத்து, ‘டெட்ரா பேக்’ செய்கின்றனர்.
நீரா பானம் (Neera Banam)
பல்லடத்தில் வசித்து வரும், உலகத் தென்னைஉழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: விவசாயிகளின் பொருளாதாரத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவே ‘தென்னீரா’ இயற்கை பானத்தை தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் 1,120 தென்னை விவசாயிகளை முதல்கட்டமாக ஒருங்கிணைத்து பணிகளை தொடங்கி உள்ளோம். இதன் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தையை ஏற்படுத்துவது, அதன் மூலம் உரிய விலையை கிடைக்க செய்ய உள்ளோம். கிடைக்கும் லாபம் இடைத்தரகர்களின்றி, விவசாயிகளிடம் நேரடியாக சேரும்.
டெட்ரா பேக் (Tetra Pack)
தற்போது ‘டெட்ரா பேக்’ மூலம்சந்தையில் விற்பனையை தொடங்கி உள்ளோம். 100 சதவீதம் இயற்கை பானத்தை, இயற்கையாகவே வழங்குகிறோம். ஒரு தென்னை மரம் ஆண்டுக்கு 120 காய்கள் தரும். ஒரு காயின் அதிகபட்ச விலை ரூ.12. ஆண்டு வருமானம் ரூ.1,440. ஆனால், நீரா எடுத்தால், மரத்தின் 4-வது மாதத்தில் இருந்து தென்னை பாளையில் இருந்து நீரா இறக்கினால், 9 மாதங்களில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். ‘டெட்ராபேக்’கில் அடைக்கப்பட்டுள்ள 200 மி.லி. நீரா ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம்.
மேலும் படிக்க
விளைச்சல் அதிகரிப்பு: கோயம்பேட்டில் குறைந்தது காய்கறி மொத்த விலை!
குப்பையில் இருந்து பசுமை உரம்: குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!
Share your comments