Credit : The Hindu
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் உட்பட 39 பேருக்கு, ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஒமிக்ரான் ஆட்டம் (Omicron Game)
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நாம் மீள்வதற்குள் நம்மைத் தாக்கிப் பதம் பார்த்து வருகிறது ஒமிக்ரான். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் ஒமிக்ரான், தற்போது தமிழகத்திலும் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது போலும்.
ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால், மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்,'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
550 படுக்கைகள் (550 beds)
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் 1,522 படுக்கைகள்; தீவிர சிகிச்சை பிரிவில் 550 படுக்கைகள் உள்ளன.
தமிழகம் முழுதும் 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 'படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்; மருந்துகளின் கையிருப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒமிக்ரானைப் பொறுத்தவரை 34 பேருக்கு பாதிப்பு என்பதை, தேசிய ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
வேகமாகப் பரவும் (Spread fast)
இன்னும், 40 மாதிரிகளின் முடிவுகள் வர வேண்டி உள்ளது. புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டங்களில், கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை உடையது. எனவே, நட்சத்திர விடுதிகளில் இரவு நேர புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும். இதுவரை, தொற்றுக் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணியரில், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரிசோதனை (Corona examination)
அவர்களில் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தொற்றுக் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணியர் அனைவரையும் தனிமைப்படுத்த, மத்திய அரசிடம் அனுமதி கோரினோம்.
எனினும், இன்று முதல் தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 17ம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், செவிலியர்கள் போன்றோருக்கு, முதல்நிலை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஓரிருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களுடன் தொடர்புடைய 3,038 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
39 பேருக்கு (For 39 people)
இவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில், 39 பேருக்கு, 'எஸ் ஜீன்' தொற்று, அதாவது ஒமிக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களின் மாதிரிகள், மத்திய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.பரிசோதனை முடிவில், எவ்வளவு பேருக்கு பாதிப்பு உள்ளது என்பது தெரிய வரும். தற்போது, மருத்துவர்கள், களப் பணியாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒமிக்ரான் மிக வேகமாக பரவக்கூடியது. இதிலிருந்து மீளத் தடுப்பூசி அவசியம்.
5-வது இடம் (5th place)
தடுப்பூசி போடும் பணி, மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரே இடத்தில் சாப்பிடுவது போன்ற இடங்களில், பெரும் பாதிப்பு ஏற்படும். தடுப்பூசிப் போடும் பணியை ஆய்வு செய்ய, மத்தியக் குழு வருகிறது. ஒமிக்ரான் பாதிப்பில், தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!
5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!
Share your comments