
இதுவரையிலும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், வரும் மார்ச் 19ஆம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சம்யுக்த கிசான் மோர்சா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் வரும் மர்ச் 5ம் தேதி 100 நாட்கள் கடந்து போராட்டத்தை தொடர உள்ளார்.
இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு சம்யுக்த கிசான் மோர்சா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 5- ஆம் தேதி ரயில் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
சம்யுக்த கிசான் மோர்சா அமைப்பின் சார்பில் கடந்த 2024 பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லிக்கு டிராக்டர் பேரணியாக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் டல்லேவால் தலைமையில் புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லையான கணூரி பாடரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
உச்சநீதிமன்ற வழக்கு
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2024 அக்டோபர் மாதம் பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நவாப் சிங் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழு இந்தியா முழுமையில் உள்ள விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு நவம்பர் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி உடனடியாக மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தற்கொலையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற இக்குழு பரிந்துரை செய்தது
நவாப்சிங் குழு பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2024 நவம்பர் 26 முதல் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜீத் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கணூரி எல்லையில் நடத்தி வருகிறார். இவருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்திய உச்சநீதிமன்ற குழு மத்திய அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனை அடுத்து மத்திய அரசின் செயலாளர்கள் தலைமையிலான குழுக்கள் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி சண்டீகரில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. பிறகு பிப்ரவரி 22 ல் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சௌகான், பியூஸ்கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் தலைமையில் இரண்டாவது கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
Read more:
இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டிய குஜாராத் பெண் விவசாயி
Share your comments