Heavy Rains In 10 Districts Of Tamil Nadu
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு, தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாகக்கூடும்.
மேலும் தென் மேற்கு பருவமழை 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வடகிழக்கு பருவ மழை தொடங்க இன்னும் சாதகமான சூழல் எதுவும் உருவாகவில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பொழிவாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
krishi Jagran
Share your comments