1. கால்நடை

செம்மறியாடு வளர்ப்பு

KJ Staff
KJ Staff

செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்ட பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டிகளில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.

செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்

  • செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல், எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
  • ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்கு  500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
  • செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதியை மட்டுமே மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
  • செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
  • அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.
மேச்சேரி இனம்- தமிழ் நாடு மாநிலம்

மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.

  • வெப்பப் பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.
  • குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.
  • தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.
  • செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
  • சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.
  • இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது.

செம்மறியாட்டு இனங்கள்

செம்மறியாடுகளை முக்கியமாக அவை தரும் பயன்களின் அடிப்படையில் ‘இறைச்சியின ஆடுகள்’ எனவும், ‘கம்பளியிழையின ஆடுகள்’ எனவும் இருவகையாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டில் இறைச்சியின செம்மறியாடுகளே அதிகமாக உள்ளன. அவை மேச்சேரி, சென்னை சிவப்பு, கீழக்கரிசல் இராநாதபுரம் வெள்ளை மற்றும் வேம்பூர் போன்றவையாகும்.

கம்பளியிழை தரும் செம்மறியாடுகள், முக்கியமாக கம்பளியிழைக்காக மட்டுமே வளர்க்கப் பட்டாலும் இறைச்சியும் தருகின்றன. கோயமுத்தூர், குரும்பை, திருச்சிக் கருப்பு மற்றும் நீலகிரி ஆகியன கம்பளியிழையினச் செம்மறியாடுகளாகும்.

ஒவ்வொரு இனத்தின் இருப்பிடம் மற்றும் குணநலன்கள்

இறைச்சியின் ஆடுகள்
1. மேச்சேரி
இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை.

இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. இதன் தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மேலும் மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம்.

மேச்சேரி- Sheep Breeding

சென்னை சிவப்பு

இந்த இனம், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகிறது. இதன் நிறத்தைக் கொண்டே சென்னை சிவப்பு எனக் கூறுகிறோம். இந்த இன கிடா ஆடுகளுக்கு நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும், பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.

 

கீழக்கரிசல்
இவை இராநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் காணப்படுகின்றன. கோடைக் காலங்களில் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் செல்வதால் இந்த ஆடுகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் காணப்படும். இந்த இன ஆடுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கீழ்த்தாடை, மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் கருப்பு நிறம் காணப்படும். கிடா ஆடுகளுக்கு நீண்ட,  திருகிய கொம்பு இருக்கும்.  பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.

இராமநாதபுரம் வெள்ளை

இந்த வகையான ஆடுகள், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இவ்வின ஆடுகளில் தலை மற்றும் கால் பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். கிடா ஆடுகளின் கொம்புகள் தடித்து திருகி இருக்கும். பெட்டை ஆடுகளுக்கு கொம்பு இருக்காது.

வேம்பூர்
இந்த இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை மற்றும் நாகலாபுரம் ஊர்களிலும், புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தச் செம்மறியாடுகள், வெள்ளை நிறத்துடன் பழுப்பு அல்லது சிவப்பு நிறத் திட்டுகள் கொண்டிருக்கும். இவற்றின் உயரம், மற்ற தமிழ்நாட்டு இனங்களை விட அதிகம். கிடாக்கள் திருகிய கொம்புடனும், பெட்டையாடுகள் கொம்பு இல்லாமலும் காணப்படும்.

கம்பளியிழையின ஆடுகள்

இதனை ‘குரும்பை ஆடு’ எனக் கூறுவர். இந்த இனம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்டது. இது வெள்ளை நிறத்துடனும், முகம், காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு நிறம் கலந்தும் காணப்படும். இதன் உரோமம் விரிப்புக் கம்பள உரோம வகையைச் சார்ந்தது. இது கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது. 

திருச்சிக் கருப்பு

இந்த இன ஆடுகள் பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்ப கருப்பாக இருக்கும்.  இதன் உரோமம் விரிப்புக் கம்பளி ரோம வகையைச் சார்ந்தது.

நீலகிரி
இந்த இன ஆடுகள் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும். இவை வெள்ளை நிறமாக இருக்கும். பழுப்பு நிறத்தில் வட்டங்கள் முகத்திலோ, உடலிலோ சில ஆடுகளில் இருக்கும். இந்த இன ஆடுகளில் கொம்புகள் கிடையாது. வால் நீளமாக இருக்கும். 20 விழுக்காடு ஆடுகள், ஈற்றிற்கு இரண்டு குட்டிகள் போடக்கூடியவை. தமிழ்நாட்டில் உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமேயாகும்.

செம்மறியாடு பராமரிப்பு முறைகள்

சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

  • குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.
  • சினை ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நலம்.
  • குட்டி ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
  • சரியான தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில் விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்க வேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல் நலம்.
  • குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக 142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • குட்டிகளை குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்க வேண்டும்.

குட்டிகளைப் பிரித்துப் பாதுகாத்தல்

  • 90 நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். பால் உற்பத்தி தாய் ஆட்டிடம் குறைவாக இருக்கும்பட்சத்தில் 60 நாட்களிலிலேயே பிரித்து விடுதல் நலம்.
  • தாய்ப்பாலுக்குப் பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.
  • முள், குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேய விடுதல் கூடாது. ஏனெனில் அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

கொட்டகை அமைத்தல்

நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்போர் அவற்றை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தல், மர நிழல்களில் அடைத்தல் மற்றும் வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தல் போன்ற முறைகளை மேற்கொள்ளுகின்றனர்.

ஆட்டுக் கொட்டகைக்கு மண்தரையே போதுமானது. தினம் ஒரு முறை சுத்தமாக கூட்டி சாணத்தை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆடுகளின் சாணம் வறண்டே இருப்பதால் கூட்டி அள்ளுவது சுலபம். சிறுநீரின் அளவும் குறைவே என்பதால், மண்தரை அதனை உறிஞ்சிக்கொள்ளும். கொட்டில் முறையில் ஆடுகள் வளர்ப்போர், கொட்டகையில் உள்ள ஈரம் உலரும்படி செய்ய பகலில் ஆடுகளை திறந்த வெளிப்பகுதியில் மேய விடலாம். தினமும் அள்ளப்படும் சாணத்தை எருக்குழியினில் சேமித்து வைத்து தேவைப்படும்போது உரமாகப் பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்து விடலாம்.

ஆடுகளுக்கான தண்ணீர் மற்றும்  தீவனத் தொட்டிகள், சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட வட்ட வடிவிலான அல்லது நீள்செவ்வக வடிவிலான தொட்டிகளாக இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உட்பக்கம், சுண்ணாம்பு அடிக்கவேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை.

ஆட்டுக் கொட்டகையில் பேன்கள், உண்ணிகள், தெள்ளுப்பூச்சிகள் ஆகியவை அதிகம் காணப்பட்டால் கிருமி நாசினி (சுமத்தியான், மாலத்தியான், பியூடாக்ஸ்) கொண்டு மருந்தடிக்கலாம். குட்டிகளை அடைக்கும் கொட்டகையில் ஒவ்வொரு குட்டியீனும் பருவத்திற்கு முன்பு மண் தரையை லேசாக சுரண்டி அகற்றி புதிய மண் கொட்டுவது நல்லது. இது கழிச்சல், நிமோனியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்
1)கோமாரி நோய் 

2) வெக்கை சார்பு நோய்

3) ஆட்டு அம்மை

4) நீலநாக்கு நோய் 

5) அடைப்பான் நோய்

இவ்வகை நோய்களுக்கு முறையான  சிகிச்சை அளிக்க வேண்டும்

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
English Summary: Sheep breeding Published on: 18 September 2018, 09:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.