1. கால்நடை

மஞ்சள் பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்

KJ Staff
KJ Staff

இந்தியா மற்றும் இதர நாடுகளில் மஞ்சள் ஒரு முக்கியமான பயிராகும். தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது.

பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

நூற்புழுக்களின் தாக்குதல்

பொதுவாக மஞ்சள் வேர் முடிச்சுகளில் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்புழுக்கள் செம்மண் கலந்த மணற்பாங்கான நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இப்புழுக்கள் மஞ்சளின் வேர்களைப் பாதிக்கின்றன. எனவே, வேர்கள் மூலம் ஊட்டச்சத்து, தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது.

விதைக்கப்பட்ட 3 மாதங்களில் மஞ்சள் பயிரில் தாக்குதல் உண்டானால் விரலியோட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, 70 முதல் 80% வரை இழப்பைச் சந்திக்க வேண்டிவரும். நூற்புழு தாக்கியச் செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமடைந்து காணப்படும்.

தாக்கப்பட்ட மஞ்சளின் வேர்களில் ஆங்காங்கே வீக்கங்கள், மிளகு போன்ற வேர் முடிச்சுகள் காணப்படும். புகையிலை, மிளகாய், கத்தரி, தக்காளி, பெரிய வெங்காயம், வாழை போன்ற பயிர்களை பயிர் சுழற்சியிலோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்க இயலும்.

மேலாண்மை

ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் துகள் கலவையை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம்.

சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவையை 0.5 சதம் கரைசலை 30 நாள்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை செடியின் தண்டுப் பகுதி மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நனையும் படி ஊற்றுவதால் கிழங்கு அழுகல் நோய் பெருமளவு குறையும். இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவதால் மஞ்சளில் நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

மேலும், ரசாயன முறையில், மெட்டலாக்சிலுடன் மேங்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 1.5 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை தூர்ப் பகுதி நனையும்படி ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகம் பெறலாம்.

செந்நிற இலைக் கருகல் நோய்

இந்த நோய் டாப்பரினா மேக்கிலன்ஸ் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் காணப்படும்.

இலை ஓரங்களில் பழுப்பு நிறத்தில் காயத் தொடங்கும். பின்னர் இலையின் மைய நரம்பு நோக்கி பரவும், தீவிரமாகத் தாக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி, சிறுத்துக் காணப்படும். இதனால், மஞ்சளின் தரம் பெருமளவு பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோய்களைந்ப்க் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எரிக்கவும், சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை 0.5 சதம் கரைசலை நடவுக்கு பின் 45 நாள்கள் கழித்து 30 நாள்கள் இடைவெளியில் மூன்று (அ) நான்கு முறை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும்.

ரசாயன பூஞ்சாண கொல்லிகளான கார்பண்டாசித்துடன் மேங்கோசெப் 2 கிராம் (அ) கேப்டானுடன் ஹெக்ஸகொனசோல் 2 கிராம் (அ) பென்கொனசோல் 1.5 மில்லி (அ) குளோரோதலோனில் 2 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒட்டும் திரவம் சேர்த்து இலைகளின் மேல் தெளித்து இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்

கொலிட்ரோடிரைக்கம் கேப்சைசி என்ற பூஞ்சணத்தால் உருவாக்கப்படும் இலைப்புள்ளி நோய், தென் இந்தியப் பகுதிகளில் தீவிரமாகக் காணப்படுகிறது.

பயிர் நட்ட 40-45 நாள்களுக்குப் பிறகு தோன்றும் இந்த நோய், ஈரமான பருவ நிலையில் தீவிரமாகப் பரவுகிறது. கருமை நிறவளையங்களை உள்புறமாகக் கொண்ட பழுப்பு நிற புள்ளிகள், இலையின் மேல் பரப்பில் காணப்படும். இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த செடிகளில் வெவ்வேறு அளவுகளில் புள்ளிகள் காணப்படும். முதலில் சாம்பல் நிற உள்புறத்தைக் கொண்ட நீள வடிவப் புள்ளிகளாகத் தோன்றும்.

ஓர் இலையின் எண்ணற்ற புள்ளிகள் தோன்றி நோயின் தீவிரம் அதிமாகும் போது புள்ளிகள் விரிந்து இலையின் முழுப் பரப்பையும் கரும்புள்ளிகளாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

தீவிரமாகத் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடுகின்றன. தாக்கப்பட்ட கிழங்குகளின் செதில்களில் கருமை நிற ஸ்ட்ரோமா காணப்படுகிறது. மழைக் காலங்களில் இந்த நோய் தீவிரமாகப் பரவுகிறது. இந்த நோய் கிழங்குகளின் மகசூலில் 60 சதம் வரை இழப்பை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்து விட வேண்டும். பின்னர் ஒரு ஹெக்டேருக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 1,250 கிராம் அல்லது மேன்கோசெப் 400 கிராம் என்னும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 2 அல்லது 3 முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

 

English Summary: Turmeric Disease management Published on: 29 November 2018, 04:53 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.