Pongal Gift
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதியில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பொங்கலை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குள்ள ரூ. 1,000 பணத்தை ஏன் பயனாளிகளின் வங்கி கணக்கில் அல்லது மணியார்டரில் செலுத்த கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததை போல், ரேசன் கார்டில் வங்கி கணக்கையும் இணைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என்றும் நியாயவிலை கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியாரின் 293 வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு வழங்கவுள்ள பொங்கல் கரும்புகள் தமிழக விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். எதிர் கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்திலேயே 5,000 ரூபாய் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments