1. செய்திகள்

மகளிருக்கான ரூ.1000- ஏமாற்ற நினைப்பவர்களுக்கு புது செக் வைத்த அரசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
kalaignar magalir urimai thittam

மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் தரவுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தில் உரிய பயனாளிகள் பயன்பெறும் பொருட்டு ஆய்வு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்பின் அந்த விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கடந்த செப்-14 ஆம் தேதி அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தினைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் கூடுதலாக 5041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 8833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் கிடைக்கும் வகையில் ஆய்வு பணியை மேற்கொள்ள அரசின் சார்பில் உத்தரவு வந்துள்ளது.

காலாண்டு- அரையாண்டு ஆய்வு:

நெறிமுறைகளை பின்பற்றியே பயனாளிகளின் பட்டியல் புதுப்பித்தல், நிராகரித்தல் இருக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளிகளின் வருமான வரி விவரங்களையும் ஆய்வு செய்ய உத்தரவு. ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருமானம் உயர்ந்திருந்தால் வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்து ஆய்வு செய்யும், காலாண்டு அடிப்படையில் பயனாளிகளின் பொது விநியோக திட்டம், நிலவுடமை தரவுகளை ஆய்வு செய்யவும் ஆணையிடப்ப்பட்டுள்ளது.  அரையாண்டில் பயனாளிகளின் தொழில், மின்சாரப் பயன்பாடுகள் குறித்த தரவுகளை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 10,64,84,06,000- உரிமைத்தொகையானது அக்டோபர் 14 அன்றே வழங்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

முதலில் ஸ்வீட் எடுங்க: தமிழகத்திற்குள் ஒரு வழியா வந்துடுச்சு வடகிழக்கு பருவமழை

English Summary: New checkmate for kalaignar magalir urimai thittam by Tamilnadu govt Published on: 22 October 2023, 11:05 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.