1. செய்திகள்

ஊழல் ஒழிப்பில் பாஜக இரட்டை வேடம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Kamal Haasan

ஊழல் ஒழிப்பு என்பது சுதந்திரதின உரைக்கு மட்டும்தானா என்று பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. இதற்கு மக்கள் என்னோடு துணைநிற்க வேண்டும் என்று சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஊழல் எதிர்ப்பு உரையாற்றினார்.

ஆனால், பாஜக ஆளும் கர்நாடகத்தின் ஊழல் குரல் ஏனோ பிரதமர் மற்றும் பாஜகவின் காதில் விழ மறுக்கிறது? ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு 40% கமிஷன் தராமல் நாங்கள் செய்த வேலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்று கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் (KSCA), தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து, இச்சங்கத்தினர் கடந்த ஆண்டே பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில், இப்போது மீண்டும் இப்பிரச்னையை வெடித்துள்ளது.

கல்வித்துறையிலும் ஊழல் கரைபுரண்டோடுகிறது என்கிறது RUPSA என்ற கர்நாடக தனியார் பள்ளிகளின் சங்கம் (Registered Unaided Private Schools Management Association ( RUPSA )) பள்ளிச்சான்று புதுப்பிப்பதில் தொடங்கி இலஞ்சம் தராமல் பள்ளிக்கல்வித்துறையில் எந்த வேலையும் நடப்பதில்லை என்று கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் மீது குற்றம்சாட்டி 13000 பள்ளிகளை உள்ளடக்கிய RUPSA சங்கம், பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருக்கிறது என்று டெல்லியில் முழக்கமிடுகிறார் பிரதமர் மோடி.

ஆனால், ஊழல் விவகாரம் காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய எதியூரப்பாவைக் கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சாராக்கியதில் தொடங்கி, இன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீது எழுந்துள்ள வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுகளை வேடிக்கை பார்ப்பதுவரையிலான நடவடிக்கைகள் ஊழல் குறித்து பாஜகவின் இரட்டைவேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

பிரதமர் அவர்களே, ஊழல் ஒழிப்பு உபதேசம் என்பது சுதந்திரதின உரைக்கு மட்டும்தானா? செயல்பாட்டுக்குக் கிடையாதா? ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மாற்றுக்கட்சியினர் மீதுமட்டும்தானா? சொந்தக்கட்சியினர் மீது கிடையாதா? இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல. ஊழல் தேசத்தை அழிக்கும் புற்றுநோய் என்ற எண்ணமுள்ள ஒட்டுமொத்த இந்தியர்களின் கேள்வியாகும். பிரதமர் மோடி, பாஜகவின் பதிலென்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

English Summary: People's Justice Center accuses BJP of playing a double role in eradicating corruption Published on: 30 August 2022, 08:52 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.