Yuvraj Parihar - Second Richest Farmer of India
கிரிஷிஜாக்ரன் முன்னெடுப்பில் ICAR ஆதரவுடன் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற மில்லினியர் விவசாயிகள் விருது நிகழ்வில், 2024 ஆம் ஆண்டின் இந்தியாவின் பணக்கார விவசாயியாக குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த பெண் விவசாயி நிதுபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பணக்கார விவசாயியாக ஆக்ராவினை சேர்ந்த யுவராஜ் பரிஹார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் 12 பிராந்திய மொழிகளில் வேளாண் சார்ந்து இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் கடந்தாண்டு (2023) மில்லினியர் விவசாயிகள் விருது நிகழ்வு நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டுக்கான மில்லினியர் விவசாயி விருது நிகழ்வு டெல்லியிலுள்ள பூசா மைதானத்தில் கடந்த டிசம்பர் 1 முதல் 3 வரை நடைப்பெற்றது.
RFOI 2024 விருது யாருக்கு?
ICAR ஆதரவு மற்றும் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவியின் பங்களிப்புடன் நடைப்பெற்ற MFOI விருது நிகழ்வில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘Richest Farmer of India’ (இந்தியாவின் பணக்கார விவசாயி) விருதினை குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த நிதுபென் படேல் வென்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இந்தியாவின் பணக்கார விவசாயி விருதினை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியினை சேர்ந்த யுவராஜ் பரிஹார் வென்றார்.
பரிஹாரின் வெற்றிப் பயணம்:
விவசாயம் சாராத குடும்பப் பின்னணியினை கொண்டவர் பரிஹார். இவரின் தந்தை மருத்துவராக இருந்த நிலையில், பாரம்பரிய விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு விவசாயத்தை நவீனமயமாக்க விரும்பினார்.
அதன் தொடக்கமாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, அவர் தனது விவசாய பயணத்தைத் தொடங்கினார். உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 400 ஏக்கர் விவசாய நிலங்களை நவீன முறையில் வேளாண் பணியினை மேற்கொள்ளும் மையங்களாக மாற்றினார். உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மூங் பீன்ஸ் போன்ற சந்தையில் அதிக தேவையுள்ள பயிர்களில் கவனம் செலுத்தி உற்பத்தி மேற்கொண்டார். தனது விளைப்பொருட்களை "டாக்டர் பிபிஎஸ்" (Dr. BPS) என்ற பிராண்டின் பெயரில் விற்பனை செய்து வருகிறார்.
பரிஹாரின் அணுகுமுறை நிலையான விவசாயத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. சொட்டு நீர் பாசன முறைகள், துல்லிய வேளாண்மை மற்றும் மண் சுகாதார மேலாண்மை நடைமுறைகளை தனது வேளாண் பணிகளில் அதிநவீன முறையில் செயல்படுத்தி வருகிறார். இவரின் வெற்றி, இப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளையும் இதே போன்ற தொழில் நுட்பங்களை பின்பற்ற உத்வேகம் அளித்துள்ளது.
விவசாயம் தாண்டி 7 கல்வி நிறுவனங்கள்:
விளைபொருட்களைப் பாதுகாக்கவும், சிறந்த சந்தை விலையைப் பெறவும் குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கி அவற்றிலும் முதலீடு செய்து வருகிறார் பரிஹார்.
விவசாயம் தாண்டி அவருடைய பார்வை கல்வியை நோக்கியும் விரிந்தது; இளைய தலைமுறையினருக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட 7 கல்வி நிறுவனங்களை அவர் நிறுவினார். விவசாயத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை வருமானம் பார்க்கும் நிலையில் இதர தொழில்கள் மூலம் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.100 கோடி வரை வருமானம் காண்கிறார் பரிஹார். 2020 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சர்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் சிறந்த உருளைக்கிழங்கு உற்பத்தியாளருக்கான விருது உட்பட, அவரது முயற்சிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பால், பரிஹாரின் நிலையான விவசாய நடைமுறைகளும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் அர்ப்பணிப்பு உணர்வும் போற்றுத்தலுக்குரியது என கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி.டொம்னிக் பாராட்டியுள்ளார்.
Read more:
இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்!
வெளியானது BAHS 2024: நடப்பாண்டு நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
Share your comments