Project Cheetah-Female cheetah 'Daksha' dies in Kuno National Park
நமீபியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் இருந்து புராஜெக்ட் சீட்டா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட 20 சிவிங்கிப்புலிகளில் (சிறுத்தை இனம்) மேலும் ஒரு சிறுத்தை நேற்று உயிரிழந்தது.
ஏற்கெனவே 2 சிவிங்கிப்புலிகள் இறந்த நிலையில் மேலும் ஒரு சிவிங்கிப்புலி இறந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதுத் தொடர்பாக தேசிய பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்ட பெண் சிறுத்தை தக்ஷா நேற்று (09.05.2023) காலை 10:45 மணியளவில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், பலனின்றி, நண்பகல் 12.00 மணியளவில் சிறுத்தை பரிதாபமாக இறந்ததாக குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சிறுத்தை உடலில் காணப்பட்ட காயங்கள், புணர்ச்சி முயற்சியின் போது, ஆண் சிறுத்தையுடன் ஏற்பட்ட வன்முறையான தொடர்பு காரணமாக ஏற்பட்டதாகத் தெரிகிறது. இனச்சேர்க்கையின் போது பெண் சிறுத்தைகளுக்கு எதிராக ஆண் சிறுத்தைகளின் இத்தகைய வன்முறை நடத்தைகள் இயல்பானவை என்று கூறப்படுகிறது.
இறந்த பெண் சிறுத்தையின் (தக்ஷா) பிரேத பரிசோதனையானது நெறிமுறையின்படி கால்நடை மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்து செப்டம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023-ல் இருபது சிறுத்தைகள் வெற்றிகரமாக குனோ தேசிய பூங்காவிற்கு (KNP) இடமாற்றம் செய்யப்பட்டன.
மற்ற சிவிங்கிப்புலி(சிறுத்தை) நிலை என்ன?
குனோ தேசியப் பூங்காவில் வேலிகள் அமைக்கப்படாததால், விலங்குகள் விரும்பியபடி பூங்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல சுதந்திரமாகச் செல்கினன. இந்த சிறுத்தைகளில் இரண்டு ஆண் சிறுத்தைகள் (கவுரவ் மற்றும் ஷவுரியா) பூங்காவிற்குளேயே தங்கியுள்ளன. இவை பூங்காவின் எல்லைகளுக்கு அப்பால் நிலப்பரப்புக்கு செல்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஆஷா என்ற பெண் சிறுத்தை, கேஎன்பி பூங்காவின் கிழக்கே சென்றாலும், பூங்காவின் பகுதிக்குள்ளேயே சுற்றி வருகின்றன. இவை மனித ஆதிக்கமுள்ள பகுதிகளுக்குள் நுழையவில்லை.
மற்றொரு ஆண் சிறுத்தை (பவன்), இரண்டு முறை பூங்காவின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்குச் செல்ல முயன்றது. தனது இரண்டாவது பயணத்தின்போது, அந்த சிறுத்தை அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று அங்குள்ள கால்நடைகளால் விரட்டப்பட்டது. அனைத்து சிறுத்தைகளும் செயற்கைக்கோள் காலர்கள் பொருத்தப்பட்டு கண்கணிக்கப்படுகின்றன. இந்த சிறுத்தைகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நமீபியாவைச் சேர்ந்த ஆறு வயது பெண் சிறுத்தை சாஷா சிறுநீரகக் கோளாறு பிரச்சினையால் உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்னும் வயதான சிவிங்கிப்புலி நரம்புத்தசை கோளாறு பிரச்சினையின் காரணமாக மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: KNP
மேலும் காண்க:
Project Cheetah- 2 சிறுத்தைகளின் உயிரிழப்புக்கு உண்மை காரணம் என்ன?
ஒரு மாம்பழத்தின் விலை 19,000 ரூபாய்- எங்க? ஏன் இவ்வளவு விலை?
Share your comments