Tricolour at home: 75th Independence day
இந்திய அரசின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது. 75 ஆண்டுகள் என்பதைச் சிறப்பிக்கும் வகையில் ’Azadi Ka Amrit Mahotsav’ (அமுதப் பெருவிழா) என்ற பெயரில் இந்திய அரசு சிறப்புப் பிரச்சாரங்கள் செய்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நாட்டு மக்களிடையே சுதந்திரப் பற்றை அதிகமாக்கவும், தேசியக் கொடியை வீடுதோறும் கொண்டு சேர்க்கவும் இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இல்லந்தோறும் மூவர்ணம் (Tricolour at home)
இந்திய தேசிய மூவர்ணக் கொடியை வீட்டிற்கு கொண்டு வர மக்களை ஊக்குவிக்கும் வகையில் "இல்லந்தோறும் மூவர்ணம்" என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தபால் நிலையங்கள் வாயிலாக தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான விற்பனை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது தொடர்பான அறிவிப்பை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க. நடராஜன் வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 1 முதல் கொடி விற்பனை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தபால் நிலையங்கள் மூலம் விற்கப்படும் ஒரு கொடியின் விலை ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடியின் பரிமாணம் 30" x 20" என்ற அளவில் இருக்கும். சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து 2191 தபால் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மண்டலத்தில் 20 தலைமை தபால் நிலையங்கள், 545 துணை தபால் நிலையங்கள் மற்றும் 1626 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மக்கள் அனைவருக்கும் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசியக் கொடியை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு www.epostoffice.gov.in என்ற வெப்சைட்டில் சென்று வாங்கலாம்.
மேலும் படிக்க
புரொபைல் பிச்சரில் தேசியக் கொடி: பிரதமர் மோடி அசத்தல்!
75வது சுதந்திர தினம்: வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்!
Share your comments