1. செய்திகள்

விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை

KJ Staff
KJ Staff
Wild boars
Credit : Vikatan

மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம், தீட்டாளம் ஆகிய ஊராட்சிகளில் விவசாய நிலங்களில் காட்டுபன்றிகள் (Wild boars) புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம், தீட்டாளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, தற்போது வேர்க்கடலை (Groundnut), நெல், தர்பூசணி, எள் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள தீட்டாளம் பஞ்சாயத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் இருக்கின்றன.

காட்டுபன்றிகள் அட்டகாசம்

பெரும்பாக்கம், தீட்டாளம் ஊரட்சிகளுக்கு உட்பட்ட வைப்பனை, கோழியாளம், தண்டலம் உள்பட பல்வேறு கிராமங்களில் உணவுக்காக நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள வயல்வெளியில் வேர்க்கடலை, எள், நெல், தர்பூசணி ஆகிய பயிர்களை இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சென்று தின்று, சேதப்படுத்தி (Damage) அழித்துவிடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு, விளைவிக்கும் பயிர்கள் ஏதும் வீடு வந்து சேரவில்லை என சோகத்தில் உள்ளனர்.

ஒரு ஏக்கர் பயிர் செய்வதற்கு குறைந்தபட்சம் ₹30 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடுகிறார்கள். அதனை காட்டுபன்றிகள் தின்றுவிட்டு அட்டகாசம் செய்வதால், மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினரிடம் புகார் (Complaint) செய்தாலும், அவர்கள் அதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, காட்டுப்பன்றிகளை அழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர தீர்வு வேண்டும்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், படாளத்தை சேர்ந்த தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.ராஜா (S. Raja) கலந்து கொண்டு இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த காட்டுப்பாக்கம் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் ஒருவர், காட்டுப்பன்றி தொல்லையில் இருந்து விவசாயத்தை காக்க வேண்டுமானால், விவசாயிகள் அவரவர் பயிர் செய்துள்ள விளைநிலங்களை சுற்றிலும் மாட்டுக் கொழுப்பு (Cow fat) தடவிய கயிறை கட்டி வைக்க வேண்டும். அந்த வாசனையை உணரும் பன்றிகள், குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு வராது. தொடர்ந்து விவசாயிகள் அப்படியே செய்ய வேண்டும் என்றார்.
இல்லையென்றால் தகர டப்பாக்களை வயல்வெளி சுற்றிலும் கயிற்றில் கட்டி வைத்தால் அவற்றின் மூலமாக இரவு நேரங்களில் கேட்கும் சத்தத்தின் காரணமாக காட்டுப்பன்றிகள் வராது எனவும் கூறினார்.

இதனால், கோபமடைந்த விவசாயிகள், நிரந்தர தீர்வுக்கான வழி கேட்டால், கிண்டல் செய்வதுபோல் பதிலளித்து கொண்டிருக்கிறீர்கள் இது முறையல்ல என தெரிவித்தனர். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை ஏற்பட்டால், அவற்றை வனத்துறையினர் (Forest Department) சுட்டு அழிக்கின்றனர். அது போன்ற நடவடிக்கையை இப்பகுதியில் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இல்லாவிட்டால், இப்பகுதியில் விவசாயத் தொழிலே, இனிவரும் காலங்களில் இருக்காது எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கோடையில் பயிர்களை காப்பாற்ற செயற்கை குட்டைகள் அமைத்த விவசாயிகள்!

தென்னை மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!

English Summary: Wild boars roar in the fields! Farmers demand permanent solution! Published on: 20 March 2021, 05:32 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.