1. விவசாய தகவல்கள்

தென்னை (ம) வாழையைத் தாக்கும் பூச்சிகள்! கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை!

R. Balakrishnan
R. Balakrishnan
Coconut
Credit : Dinamalar

தென்னை மற்றும் வாழை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தென்னை மற்றும் வாழை சாகுபடி (Coconut & Banana Cultivation) செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் தென்னை மற்றும் வாழை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. எனவே விவசாயிகள் இவ்வெள்ளை ஈக்களை பற்றி தெரிந்து கொள்வதோடு ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.


இந்த ஈக்களின் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும்.

கட்டுப்படுத்த ஆலோசனை

வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தற்பொழுது கோடை வெப்பநிலை அதிகமாக இருப்பதால் இத்தாக்குதல் அதிகமாக வாய்ப்புள்ளது.
மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் 1½ அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணிவரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

Pest Attack in Coconut
Credit : Dinamalar

பூச்சித் தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கின்றது. என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதனை வாங்கி விவசாயிகள் தென்னந்தோப்பில் வெளியிடலாம்.

கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கி களின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.

இரை விழுங்கி முட்டைகள், இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் உயிரியல் கட்டுபாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வாங்கி பயன்பெறலாம். அதிக அளவு பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தினை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

நாட்டுக் கோழிகளுக்கு செலவில்லாத, சிறந்த தீவனமாகப் பயன்படும் கரையான்களை தயாரிக்கும் வழிமுறை!

கோடையில் உடல் நலம் காக்கும் வெள்ளை வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள்!

English Summary: Insects that attack coconut and banana! Agriculture Officer advised to control! Published on: 30 April 2021, 12:19 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.