
A cyclonic circulation is likely to form over the southeast Bay of Bengal by May 6
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை மழை வெளுத்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; தாழ்வு மண்டலமாக இது வலுவடைந்து, வடக்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் எனவும் புயலின் தன்மை, நகர்வு திசை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தினை பொறுத்தவரை அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை நிலவரம் பின்வருமாறு-
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் கீழ்க்கண்ட இடங்களில் மழை பெய்ய வாய்புள்ளது.
03.05.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
04.05.2023 மற்றும் 05.05.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.05.2023 மற்றும் 07.05.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
05.05.2023 முதல் 07.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்| அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
03.05.2023:
தெற்கு ஆந்திரா - தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.05.2023:
தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.05.2023:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
pic courtesy: odishaweb
மேலும் காண்க:
இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை- உங்கள் மாவட்டமும் லிஸ்டில் இருக்கிறதா?
Share your comments