Agricultural Digital Technology Training Workshop in Trichy
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் , கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிஏபிஐ (CABI) பன்னாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேளாண்மையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை நடை பெற்றது.
திருச்சியில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டரையின் துவக்க உரை நிகழ்த்திய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆர் ராஜ்குமார், வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதில் விவசாயிகள் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். தற்போது உள்ள அலைபேசி செயலி, இணையம் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வேளாண்மையில் உள்ள பிரச்சனைகள் வெகுவாக தீர்க்க முடியும். அதனால் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வேளாண்மையில் டிஜிட்டல் கருவிகள்
கருத்துரை வழங்கிய கிரியா இயக்குனர் முனைவர் கே சி சிவபாலன், நம் நாட்டில் 120 கோடி பேர் அலைபேசி பயன்படுத்துகிறார்கள் அலைபேசி வழியே 100 கோடி பேர் இன்டர்நெட் சேவைகளை பெறுகிறார்கள். இந்திய கிராமங்களில் 60 சதவீத மக்கள் தொலை பேசி வசதிகள் பெற்றுள்ளனர். எனவே வேளாண்மை தொழில் நுட்பங்களை டிஜிட்டல் கருவிகள் மூலம் பரவலாக்கம் செய்ய முடியும். டிஜிட்டல் கருவிகள் மூலம் விவசாயிகள், வேளாண்மையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
வேளாண்துறைக்கு உதவும் சமூக வலைத்தளம்
திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தனது வாழ்த்துரையில் சமூக வலைத்தளங்கள் தற்போது பரவலாக வரவேற்பு பெற்று வருகின்றன. குறைந்த நேரத்தில் அதிக விவசாயிகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வேளாண் செய்திகளை கொண்டு சேர்க்க முடியும் என்றார்.
ஒருங்கிணைந்த பூச்சி & நோய் மேலாண்மை
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கரூர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.திரவியம் அவர்கள் பேசுகையில், வேளாண்மையில் 30-40 சதவீத பொருளாதார இழப்பு பூச்சி மற்றும் நோய்கள் மூலம் ஏற்படுகிறது. இரசாயன முறையை மட்டுமே கடைபிடிக்கும் போது மூலதன செலவீனம் ஏற்படுகிறது எனவே ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கடை பிடிக்க வேண்டும் என்றார்.
தொழில்நுட்ப சேவைகள்
சிஏபிஐ (CABI) நிறுவன பயிர் சுகாதார ஆலோசகர் முனைவர் மஞ்சு தாகூர் சிஏபிஐ (CABI) அறிமுகம் செய்துள்ள பூச்சி மற்றும் நோய் மேலாண்மை சேவைகளை வழங்கும் பிளான்ட் வைஸ் பிளஸ் போர்டல் (PLANTWISE PLUS PORTAL), செயலி, தொழில்நுட்ப அறிவு வங்கி (CABI Knowledge Bank) போன்ற தொழில்நுட்ப சேவைகள் குறித்து பயிற்சி வழங்கினார் .
பயிற்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பயிர் மருத்துவர்கள் , திருச்சி ஜமால் முகமத் கல்லூரி தாவரவியல் முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் , திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவியர் , புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவியர், பெரம்பலூர் தனலட்சுமி வேளாண்மை கல்லூரி உதவி பேராசியைகள் மற்றும் மாணவியர், இமயம் வேளாண்மை கல்லூரி துணை முதல்வர் முனைவர் எஸ்.இளைய பாலன் , வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர்கள் , வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர்கள், இயக்குனர்கள், முன்னோடி விவசாயிகள், பெண்கள் உட்பட 75க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Read more
ஈஷா மண் காப்போம் சார்பில் "அக்ரி ஸ்டார்ட்-அப்" திருவிழா!
குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு
Krishi-DSS | எப்போ விதைக்கனும் எப்போ அறுவடை செய்யனும்? இனி செயற்கைக்கோள் சொல்லும்!
Share your comments