1. செய்திகள்

நள்ளிரவில் அலறியடித்த பொதுமக்கள்- எண்ணூர் உர ஆலையில் கசிந்த அமோனியா

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
ammonia gas leak at ennore

சென்னையை அடுத்த எண்ணூர் பெரிய குப்பம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m^3 ஆக இருக்க வேண்டிய அமோனியா,  2090 microgram/m^3 ஆகவும், கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49mg/L அளவில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமோனியா வாயு வெளியேறிய கோரமண்டல் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

கோரமண்டல் தரப்பு விளக்கம் என்ன?

அமோனியா வாயு வெளியேறியது தொடர்பாக, கோரமண்டல் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விவரம் பின்வருமாறு-

”வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, (26/12/2023) அன்று 23.30 மணி அளவில் ஆலை வளாகத்திற்கு வெளியே கரையோரத்திற்கு அருகே அம்மோனியா இறக்கும் சப்ஸீ பைப்லைனில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதை நாங்கள் கவனித்தோம். உடனடியாக தீவிர நடவடிக்கையில் இறங்கி, குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த நிகழ்வின் போது, தொழிற்சாலை அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் சில நபர்கள் அசௌகரியத்தை வெளிப்படுத்தினர் மற்றும் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி வழங்கப்பட்டது. தற்போது, அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். கோரமண்டல் எப்பொழுதும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பு முறையை கடைபிடிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிப்படைந்த பொதுமக்கள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் தான் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடலில் எண்ணெய் கசிந்து பெரும் சிரமத்திற்கு பொதுமக்கள் உள்ளாகியுள்ளனர். அந்த வடு மறைவதற்குள், அமோனியம் வாயு கசிந்த சம்பவத்தினால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொழிற்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினைப் போன்று இதனை அரசு தாமாக முன்வந்து மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வருவதால் பெரியகுப்பம் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

Read more:

PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!

ஏசி ரூம்- தினமும் கடுகு எண்ணெய் மசாஜ்: ராஜ வாழ்க்கை வாழும் கோலு-2 முர்ரா எருமை

English Summary: ammonia gas leak at ennore Coromandel International Limited Fertiliser unit Published on: 27 December 2023, 10:03 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.