District Arts Forum Awards! Applications are welcome online Mode!
மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பம் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாகத் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாகக் கலைஞர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் மாவட்டக் கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என ஐந்து விருதுகள் ஒவ்வொரு விருது வகையிலும் மூன்று விருதுகள் என மாவட்டம் ஒன்றுக்கு 15 விருதுகள் என்ற அடிப்படையில் ஆண்டொன்றுக்கு 555 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகளின் பட்டியல்:
- கலை இளமணி விருது (18 வயதிற்கு உட்பட்டோர்) - விருது தொகை ரூ.4,000
- கலை வளர்மணி விருது (19 வயது முதல் 35 வரை) - விருதுத் தொகை ரூ.6,000
- கலைச் சுடர்மணி விருது (36 வயது முதல் 50 வரை) - விருதுத் தொகை ரூ.10,000
- கலை நன்மணி விருது (51 வயது முதல் 65 வரை) - விருதுத் தொகை ரூ.15,000
- கலை முதுமணி விருது (66 மற்றும் அதற்கு மேற்பட்டோர்) விருதுத் தொகை ரூ.20,000
அந்த வகையில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டிற்கு மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையினால் வரவேற்கப்படுகின்றன. கலைஞர்களின் பயன்பாட்டிற்கு விண்ணப்பங்கள் இணையவழியில் பூர்த்திச் செய்யக் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத்துறையின் இணையதள முகவரியான www.artandculture.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கலை மன்ற விருதிற்கு விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தங்களது புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் பெயர், பிறந்த தேதி, ஆதார் அடையாள அட்டை, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் முதலானவைகளுடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையின்கீழ் அமைக்கப்படுகின்ற தெரிவுக்குழுவின் வாயிலாகத் தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதிற்குத் தெரிவு செய்யப்படுவர். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பங்களை வருகின்ற ஜூலை 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனை அனுப்பி வைக்க வேண்டும் எனச் செவ்வியல் கலை, கிராமியக் கலை மற்றும் கவின் கலை கலைஞர்களை கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க
15 புதிய விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு|ரூ.45 லட்சம் ஒதுக்கீடு|வேளாண் அமைச்சர் தகவல்!
Share your comments