
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. நவரை பருவத்தில், 11,767 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதன்படி, 70,230 டன் நெல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு பருவத்திற்கும் நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். நெல் கொண்டு வரும் விவசாயிகளிடம் இருந்து, பட்டா நகல் மற்றும் சிட்டா நகல் வி.ஏ.ஓ., சான்று பெற்று, இத்தகவலை இ.-டி.பி.சி., மென்பொருள் வாயிலாக, கொள்முதல் நிலைய பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைரேகை பதிவு வாயிலாக, தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ்வாறு இயலாத பட்சத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் வாயிலாக, ஓ.டி.பி., எண் வரப்பெற்றவுடன், நெல்லை விற்பனை செய்யலாம். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, அந்த படிவத்தை வி.ஏ.ஓ., கையெழுத்து பெற்று, விபரங்களை கொள்முதல் கையடக்க கருவியில், அலுவலக பணியாளர்கள் உதவியுடன், www.tncsc--edpc.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்வர்.
நெல் கொள்முதலுக்குரிய தொகை, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில், மின்னணு பணப்பரிமாற்றம் வாயிலாக நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வோர் பணம் வசூலிப்பதாக, தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துவதால், அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, அவர்கள் மூட்டைக்கு 50--- --70 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், புரோக்கர்கள் வாயிலாக மாற்று இடத்தில் உள்ள நெல்லை விற்பனை செய்வதாகவும், நெல் அறுவடை செய்யும் முன்பே பதிவு நடப்பதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும், ஆவணங்களை பதிவு செய்ய விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் அளிக்கும்போது, அவர்கள் அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
விவசாயிகள் என்ற பெயரில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த கிளை, ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருக்கும் நபர்களை, நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த அனுமதி அளித்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து, 40 கிலோ நெல் மூட்டைக்கு, 65 --- 75 ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். நெல் துாற்றுவோர், நெல் மூட்டை ஏற்றுவோர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் போக்குவரத்து செலவு, அரசியல் கட்சியினருக்கு நன்கொடை என, பலவிதமாக கணக்கீடு செய்து வசூலித்து வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றிய விவசாயிகள்:
ஒரு மூட்டை நெல் சுத்தம் செய்து ஏற்ற 22 ரூபாய், கிடங்கில் இறக்க 10 ரூபாய் என, 32 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர். அதே நெல் மூட்டைக்கு ஒரு விவசாயிடம் இருந்து, நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சியினர் 70 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். கூலியாட்களுக்கு கொடுத்தது போக மீதம் 38 ரூபாய், நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் அரசியல் கட்சியினருக்கு கிடைக்கிறது என்று கூறினார்.
Related links:
Share your comments