Police Akka Launching
சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுக்க காவல் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகரில் கலை மற்றும் அறிவியல் கல்லூர்கள், மருத்துவம் கல்லூரிகள், பொறியியல் கல்லூர்கள் என 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான, பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.
கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்களை கண்டறிந்து அவற்றை தீர்ப்பது, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை கண்காணித்து, கண்டறிந்து காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளை செய்வார்.
இவர்கள் மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு, மாணவிகள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக காப்பார்கள். மாநகரில் உள்ள 60 கல்லூரிகளுக்கு 37 பெண் காவலர்கள் ‘போலீஸ் அக்கா’வாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொடர்பு எண்கள் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments