
பல்லடத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு, விவசாயிகள், பொதுமக்கள் ஓரணியில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் பல்லடத்தில், விசைத்தறி, கறிக்கோழிக் பண்ணைகள், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் என, பல தரப்பட்ட தொழில்கள் நடக்கின்றன.
அதற்கு இணையாக இருந்த விவசாய தொழில், தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் 'சுருங்கி' வருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால், காய்கறி பயிர், தானியம் சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பலர் தென்னைக்கு மாறினர்.
பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் பல்லடம் வட்டாரம் பயனடைந்தாலும், பல்லடத்தின் மேற்கு பகுதியில் உள்ள கேத்தனுார், சித்தம்பலம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி உள்ளிட்ட, 13 கிராமங்கள் சேர்க்கப்படவில்லை.
பல்லடத்தில் பெரியளவில் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்களும் இல்லை; 80க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் தான் உள்ளன. இவற்றுக்கு மழை நீரை எடுத்துச் செல்லும் நீர்வழிப்பாதைகளும் 'மாயமாகி' விட்டதால், அவையும் வானம் பார்த்தே உள்ளன.
ஆண்டு சராசரி மழையளவு, 500 மி.மீ., மட்டுமே என்பதால், மழைநீரும் போதுமானதாக இருப்பதில்லை. ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயிகள், சாகுபடியில் ஈடுபடுகின்றனர். ஆழ்துளை கிணற்று நீரும், 1,000 அடிகளுக்கு கீழ் சென்றுவிட்ட நிலையில், விவசாயத்தை காப்பாற்ற, இனி வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒருங்கிணைந்தவிவசாயிகள்!
எதிர்கால பாதிப்பை கருத்தில் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வுகாண விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓரணியில் இணைந்துள்ளனர்.
'பல்லடம் பகுதி நீர் செறிவூட்டும் திட்டம்' என்ற பெயரில், ஏற்கனவே கிடப்பில் உள்ள ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம், பி.ஏ.பி., மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டுதல், அத்திக்கடவு- - அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்துதல், நொய்யல் அல்லது சூலுார் குளத்தின் உபரி நீரை, குளம் குட்டைகளுக்கு நிரப்புதல், பாண்டியாறு - மாயாறு இணைப்புதிட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் தயாராகி வருகின்றனர்.
Share your comments