1. செய்திகள்

ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Jaggery in Ration shop

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளான கொழுமம், கணியூர், கடத்தூர், கொமரலிங்கம், வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது. அமராவதி புதிய,பழைய வாய்க்கால் பாசனப் பகுதி மற்றும் பிஏபி பாசன பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். ஆனால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகள் உரிய காலத்தில் ஆண்டு தோறும் வெட்டப்படாததால் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆலைக்கு கரும்பு பயிரிடுவதை குறைத்து வெல்லம் காய்ச்ச மட்டும் பயிரிட ஆரம்பித்தனர்‌.

வெல்லம் தயாரிப்பு (Jaggery Preparation)

இதன் மூலம் கரும்பு 9 மாதம் முதல் 11 மாதத்துக்குள் வெட்டப்படுவதால் நல்ல சாறுடன் எடையும் கிடைப்பதால் தனியார் வெல்லம் தயாரிக்கும் இடங்களுக்கும், தாங்களாகவே சிறிய அளவில் வெல்லம்  யூனிட் அமைத்தும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தற்போது உடுமலையில் தயாராகும் வெல்லம் அருகில் உள்ள கேரள மாநிலத்துக்கும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதாக கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

வெல்லம் தயாரிப்பு குறித்து மடத்துக்குளம் விவசாயி ஒருவர் கூறுகையில், “மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில்,வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்யத் தொடங்குவோம். இப்போது மழை குறைந்த பின்னர் கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 50 டன் கரும்பு கிடைக்கும். ஒரு டன் கரும்பு தற்போது ரூ.2300 வரை வாங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து ஒரு சிப்பம் 30 கிலோ எடையில், சுமார் 160 முதல் 200 சிப்பம் வெல்லம் தயாரிக்கலாம். அச்சு வெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் 950 ரூபாய் முதல் 1350 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் உள்ள கரும்பு எனில் ஒரு கொப்பரைக்கு 5 முதல் 7 சிப்பம் வரை வெல்லம் கிடைக்கும். தற்போது உரவிலை, போக்குவரத்து செலவு, அச்சு வெல்லம் தயாரிக்க கூலியாட்கள் சம்பளம், டீசல் விலை தற்போது பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில் வெல்லத்தின் தற்போதைய கொள்முதல் விலை நிலவரம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. இதனால் பல விவசாயிகள் தனியார் கரும்பு வியாபாரிகளிடம் கரும்புகளை விற்று வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

தயாராகும் வெல்லத்தை விட இங்கு தயாராகும் வெல்லம் சுவை நன்றாக இருக்கும். இதனால் அனைவரும் இங்கு தயாராகும் வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர். கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பொங்கல் பண்டிகைக்கு அரசே வெல்லத்தை அந்தந்த மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, ரேசன் கடைகளில் விற்பனை செய்வதற்கு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

பேரழிவுக்கான பாதை தான் பரந்தூர் விமான நிலைய திட்டம்: விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

பொங்கல் பரிசு எவ்வளவு ரூபாய் தரப் போறாங்க? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!

English Summary: Sell ​​jaggery in ration shops: Farmers request to Tamil Nadu government! Published on: 22 December 2022, 05:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.